தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகியுள்ளதைப் பற்றி...
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 19-வது சட்டப்பேரவைக்கான தேர்தல் நாளை (ஏப். 23) 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி, மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வாக்குச் சாவடிகளுக்கு வாக்கு இயந்திரங்களை எடுத்துச் செல்லும் பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது.
இந்த நிலையில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று (ஏப்.22) காலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.
Advertisement
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 75,064 வாக்குச் சாவடிகளுக்கு சுமார் 1.06 லட்சம் இயந்திரங்கள் எடுத்துச் செல்லும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மாநிலம் முழுவதும் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பாதுகாப்புப் பணியில் 1.47 லட்சம் காவலர்கள் மற்றும் மத்திய ஆயுதப் படையினர் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 24 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பதற்றமான வாக்குச் சாவடிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள 5,938 வாக்குச்சாவடிகளில் சிறப்புப் பாதுகாப்புப் படையினர் கூடுதலாக பாதுகாப்புப் பணிக்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
மாநிலம் முழுவதும் 62 இடங்களில் வருகிற மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் நட்சத்திர வேட்பாளர்கள், சுயேச்சைகள் என 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தமிழ்நாட்டில் 5.73 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 2.77 கோடி ஆண் வாக்காளர்களும், 2.89 கோடி பெண் வாக்காளர்களும் உள்ளனர். 14,59,039 பேர் முதல்முறையாக வாக்காளிக்கவுள்ளனர்.
இந்தியத் தேர்தல் ஆணையம் அமைத்த பறக்கும் படை குழுக்கள் நடத்திய சோதனைகளில், வாக்காளர்களுக்கு வழங்கவிருந்த ரூ. 1,262 கோடி மதிப்பிலான பரிசுப் பொருள்கள் மற்றும் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில், பணமாக மட்டும் ரூ. 543 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகி உள்ளது” எனத் தெரிவித்தார் அர்ச்சனா பட்நாயக்.
இதையும் படிக்க... தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம்