நெல்லை: மணக்கோலத்தில் ஜனநாயகக் கடமை ஆற்றிய புதுமணத் தம்பதி!
புதுமணத் தம்பதிகள் வாக்களித்த நெகிழ்ச்சியான சம்பவம் பாளையங்கோட்டையில் நடைபெற்றுள்ளது.
திருமணம் முடிந்த கையோடு மணக்கோலத்திலேயே வாக்குச் சாவடிக்கு வந்து புதுமணத் தம்பதிகள் வாக்களித்த நெகிழ்ச்சியான சம்பவம் பாளையங்கோட்டையில் நடைபெற்றுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து வருகிறது. இன்று திருமண நாள் என்பதால் அதிகளவில் திருமணங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில்
நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடகிருஷ்ணன் - அபிராமி ஆகிய இருவருக்கும் இன்று காலை பாளையங்கோட்டை மேலவாசல் முருகன் கோயிலில் திருமணம் நடைபெற்றது.
Advertisement
திருமணச் சடங்குகள் முடிந்த கையோடு, புதுமணத் தம்பதிகள் இருவரும் தங்களது வீட்டிற்குச் செல்வதற்கு முன்பாக, நேரடியாக வாக்குச் சாவடிக்குச் செல்ல முடிவெடுத்தனர். அதன்படி, பாளையங்கோட்டை லோயாலா கான்வென்ட் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச் சாவடிக்கு மணக்கோலத்திலேயே வந்த வெங்கடகிருஷ்ணன் - அபிராமி வரிசையில் நின்று தங்களது வாக்கினைப் பதிவு செய்தனர்.
தங்களது வாழ்வின் முக்கிய நாளில், நாட்டின் முக்கிய கடமையான ஜனநாயகக் கடமையையும் ஆற்றிய இந்த புதுமணத்தம்பதிகளை அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர். பாளையங்கோட்டையில் புதுமணத் தம்பதியினர் திருமணம் முடிந்த உடனே வந்து வாக்களித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.