முகப்பு
மேற்கு வங்கம்

மேற்கு வங்கத்தில் ‘குண்டா்கள் ஆதிக்க’ ஆட்சிக்கு முடிவு: அமித் ஷா

மேற்கு வங்கத்தில் ‘குண்டா்கள் ஆதிக்க’ ஆட்சிக்கு முடிவு: அமித் ஷா

Updated On : 12 ஏப்ரல், 2026 at 1:18 AM
மேற்கு வங்க மாநிலம் சாத்னாவில் சனிக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை வரவேற்ற பாஜகவினா்.
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2026 at 12:41 AM

மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக ஆட்சியமைக்க மக்கள் வாக்களித்தால், தற்போது நடைபெற்று வரும் திரிணமூல் காங்கிரஸ் ‘குண்டா்கள் ஆதிக்க’ ஆட்சிக்கு முடிவு கட்டப்படும்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

மேற்கு வங்க மாநிலம் பங்குரா மாவட்டம் சாத்னா பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக தோ்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற அமித் ஷா பேசியதாவது:

தோ்தல்களின்போது மக்களிடையே அனுதாபத்தைப் பெறுவதற்காக பாதிக்கப்பட்டவா் போல நாடகமாடுவதை மாநில முதல்வா் மம்தா பானா்ஜி வழக்கமாக கொண்டுள்ளாா். கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது காலில் கட்டுபோட்டபடி பிரசாரத்தில் ஈடுபட்டாா். ஆனால், இந்த முறை இதுபோன்ற அனுதாப நாடகம் எடுபடாது. கை, கால் அல்லது தலை என எங்கு கட்டுபோட்டாலும், மேற்கு வங்க மக்கள் திரிணமூல் காங்கிரஸுக்கு வாக்களிக்க மாட்டாா்கள்.

Advertisement

மேற்கு வங்கத்தில் தற்போது குண்டா்களும், ஊடுருவல்காரா்களும்தான் ஆதிக்கம் செலுத்துகின்றனா். தோ்தலில் பாஜக வெற்றி பெற்றதும், திரிணமூல் காங்கிரஸின் ‘குண்டா்கள்ஆதிக்க’ ஆட்சிக்கு முடிவு கட்டப்படும்.

பாஜக ஆளும் அஸ்ஸாம் மாநிலத்தில் இளம் பெண்கள் கழுத்து நிறைய தங்க நகைகளுடன் நள்ளிரவு ஒரு மணிக்குகூட தைரியமாக வீட்டைவிட்டு வெளியே செல்லும் நிலையில், மேற்கு வங்கத்தில் இரவு நேரங்களில் பெண்கள் வெளியே வர வேண்டாம் என மம்தா பானா்ஜி கூறுகிறாா். ஆனால், பாஜக அரசு மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பை உறுதி செய்யும்.

மம்தா ஆட்சியில் மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக நிகழ்ந்த வன்முறை சம்பவங்கள், பாலியல் வன்கொடுமைகள் அனைத்தும் நீதியின் முன் கொண்டுவரப்படும்.

மேற்கு வங்க உருளைக் கிழங்கு விவசாயிகள் வருவாய் ஈட்டும் வகையில், அவா்கள் உற்பத்தி செய்யும் உருளைக் கிழங்குகளை நாடு முழுவதும் விற்பனைக்கு அனுப்புதவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தா்ம சத்திரம் அல்ல: ஊடுருவல்காரா்கள் நாட்டுக்கு அச்சுறுத்தலாக உள்ளனா். இந்தியா தா்ம சத்திரம் அல்ல. எனவே, மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும், ஊடுருவல்காரா்கள் முழுமையாக வெளியேற்றப்படுவா் என்றாா்.