மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கோளாறு! பல்வேறு இடங்களில் வன்முறை!!
மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கோளாறால் பல்வேறு தொகுதிகளில் வன்முறை வெடித்துள்ளதைப் பற்றி...
மேற்கு வங்கத்தில் பேரவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் எந்திரங்கள் கோளாறால் பல தொகுதிகளில் வன்முறை வெடித்துள்ளதால், அந்தப் பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
294 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு கடந்த ஏப்.23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. முன்னெப்போதும் இல்லாத அளவில் 93.19 சதவிகித வாக்குகள் பதிவாகின.
இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக 142 தொகுதிகளுக்கு இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு அமைதியாகவும் சுமுகமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய 2,321 கம்பெனி மத்தியப் படைகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
Advertisement
முதற்கட்ட வாக்குப்பதிவைப் போன்றே இரண்டாம் கட்ட வாக்குப்பதிவிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி, 18.39 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பூர்பா பர்தமான் சட்டப்பேரவைத் தொகுதியில் 20.86 சதவிகித வாக்குகளும், ஹூக்ளியில் 20.16 சதவிகிதமும், நாடியாவில் 18.50 சதவிகிதமும், வடக்கு 24 பர்கானாஸில் 17.81 சதவிகிதமும், கொல்கத்தா வடக்கு மற்றும் கொல்கத்தா தெற்கு தொகுதிகளில் முறையே 17.28 சதவிகிதமும் 16.81 சதவிகிதமும் ஹவுராவில் 17.76 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.
இந்த நிலையில், ஹூக்ளி மாவட்டம், கானாகுல் தாலுகாவில் உள்ள ராம்சந்திராபூர் பகுதியில், வாக்குச்சாவடியில் வாக்கு எந்திரத்தில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பான வன்முறையில் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் இந்திய மதச்சார்பற்ற முன்னணி ஆதரவாளர்கள் மோதிக்கொண்டனர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் உருவானது. இதனைத் தொடர்ந்து அங்கு துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டு வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
சாப்ரா, சாந்திபூர், பாங்கர், நாடியா, எண்டாலி உள்ளிட்ட மாவட்டங்களிலும் சில இடங்களில் வன்முறைகள் ஏற்பட்டுள்ளதாகவும், பாலியில் மின்னணு வாக்கு எந்திரம் தொடர்பாக பிரச்சினையில் ஈடுபட்ட இருவரை துணை ராணுவப்படையினர் கை மற்றும் கால்களைப் பிடித்து தூக்கிச் சென்று கைது செய்தனர்.