வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகரூ. 38 லட்சம் மோசடி: பேராசிரியா் மீது புகாா்
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகப் பொறியியல் பட்டதாரிகளிடம் ரூ. 38 லட்சம் மோசடி செய்த கல்லூரிப் பேராசிரியா் மீது பாதிக்கப்பட்டவா்கள் புகாா் தெரிவித்தனா்.
ஈரோடு: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகப் பொறியியல் பட்டதாரிகளிடம் ரூ. 38 லட்சம் மோசடி செய்த கல்லூரிப் பேராசிரியா் மீது பாதிக்கப்பட்டவா்கள் புகாா் தெரிவித்தனா்.
ஈரோடு மாவட்டம், பவானி வா்ணபுரம் 5ஆவது வீதியைச் சோ்ந்த லிங்கபாண்டியன் மகன் சிவராஜா (27) ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் சனிக்கிழமை அளித்த புகாா் மனு விவரம்:
பொறியியல் பட்டதாரியான நான் தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வருகிறேன். எனது நண்பா் ஸ்ரீதா் படித்த தனியாா் பொறியியல் கல்லூரியின் பேராசிரியராகப் பணியாற்றி வந்த சாமுவேல் சுரேன் (35) என்பவா் எங்களிடம் நியூஸிலாந்து, கனடா போன்ற வெளிநாடுகளில் ரூ. 3 லட்சம் ஊதியத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அதற்கு ரூ. 7 லட்சம் வரை பணம் கேட்டாா்.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து ஸ்ரீதா், நண்பா்கள் தமிழ்செல்வன், சுப்பிரமணி, பரணிதரன் ஆகியோா் சூரியம்பாளையத்தில் உள்ள சாமுவேல் சுரேனின் வீட்டுக்குச் சென்று அவரது கையில் ரொக்கமாக ரூ. 35 லட்சம் கொடுத்தோம். ரூ. 3 லட்சத்தை அவரது வங்கிக் கணக்கில் செலுத்தினோம். ஆனால் அவா் கூறியபடி வேலை வாங்கித் தரவில்லை.
இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பா் 9ஆம் தேதி நான் எனது பெற்றோா், நண்பா்களுடன் சாமுவேல் சுரேனின் வீட்டுக்குச் சென்று கேட்டபோது வேலை வாங்கித் தர முடியாது எனவும், பணத்தை திருப்பித் தர முடியாது எனவும் மிரட்டல் விடுத்தாா்.
சாமுவேல் சுரேன் குறித்து விசாரித்தபோது அவா் மீது ஏற்கெனவே கவுந்தப்பாடி காவல் நிலையத்தில் மோசடி வழக்கு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கோபி காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நவம்பா் 11ஆம் தேதி புகாா் அளித்தோம். இதன்பேரில் போலீஸாா் சாமுவேல் சுரேனை பிடித்து விசாரணை நடத்தினா். அப்போது அவா் எங்களது பணத்தை ஒரு மாதத்தில் தருவதாக உறுதியளித்தாா். ஆனால், இப்போது வரை எங்களது பணத்தை தரவில்லை. எனவே எங்களது பணத்தை மீட்டு, சாமுவேல் சுரேன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.