4.3.1976: த.நா. விவசாய தொழிலாளர் ஊதிய உயர்வு - ஆண், பெண் தொழிலாளர் என்ற பாகுபாடு நீக்கம்
த.நா. விவசாய தொழிலாளர் ஊதிய உயர்வு பற்றி...
அரை நூற்றாண்டுக்கு முன்4.3.1976: த.நா. விவசாய தொழிலாளர் ஊதிய உயர்வு - ஆண், பெண் தொழிலாளர் என்ற பாகுபாடு நீக்கம்
த.நா. விவசாய தொழிலாளர் ஊதிய உயர்வு பற்றி...
சென்னை, மார்ச். 3 - மார்ச் 2 (ஆம் தேதி) செவ்வாய்க் கிழமை முதல் தமிழ் நாட்டில் பண்ணைகளில் வேலை செய்யும் எல்லா ரக விவசாயத் தொழிலாளர்களின் ஊதியங்களும் த. நா. சர்க்காரால் உயர்த்தப்பட்டுள்ளன.
சர்க்காரின் இந்த உத்தரவு விசேஷ கெஜட் ஒன்றில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு ரக பண்ணை ஊழியர்களிடம் ஒரு நாளைக்கு அதிகபட்சம் எவ்வளவு மணி நேரம் வேலை வாங்கலாம் என்றும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
ஆண், பெண் என்ற வித்யாசம் இராது
விவசாயத் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட வரையில் ஆண்களுக்கு இவ்வளவு ஊதியம் பெண்களுக்கு இவ்வளவு ஊதியம் என்ற பாகுபாடு இனி இராது.
இருவருக்கும் சரிசமமான ஊதியம் வழங்கப்படும். ஏற்கனவே ஆண்களுக்கும், பெண்களுக்கும் வெவ்வேறு விதமான ஊதியங்கள் அளிக்கப்பட்டு வந்தன.
விவரம்
விவசாயத் தொழிலாளியின் குறைந்தபட்ச ஊ தியம் 5 ரூபாய் என நிர்ணயமாகிறது. விவசாயத் தொழிலாளர்களுக்கு நியாய ஊதியச் சட்டத்தின் கீழ் ஊதியம் கொடுப்பது கிழக்குத் தஞ்சையில், கும்பகோணம், மாயவரம், சீர்காழி, நன்னிலம், நாகப்பட்டினம், திருவாரூர், மன்னார்குடி ஆகிய தாலூகாக்களில் உள்ளது. அந்த ஏழு தாலூகாக்கள் நீங்கலாக மாநிலத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் புதிய ஊதிய விகிதம் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கலப்பை, உழுவதற்கான எருதுடன் வேலைக்கு வரும் வயது வந்த தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்ச ஊதியம் 9 ரூபாய் தரவேண்டும்.
மேற்சொன்ன சாதனங்கள் (ஏர், கலப்பை, எருது இன்றி) இல்லாமல் உழவுத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளிக்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்ச ஊதியம் 15 ரூபாய் கொடுத்த வேண்டும். ...
இந்தியாவுடன் பேச எப்போதும் தயார் என்கிறார் பாக். மந்திரி
இஸ்லாமாபாத், மார்ச். 3 - இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பைசலாகாமல் பாக்கியுள்ள எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பதற்கு பாகிஸ்தான் எப்போதுமே தயாராக உள்ளது என்று பாகிஸ்தானின் வெளி விவகார இலாகா துணை மந்திரி அஜீஸ் அகமத் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் தேசிய அசெம்பிளியில் செவ்வாயன்று அவர் உரை நிகழ்த்தினார்.
"இரு நாடுகளுக்கும் இடையே தூதர் உறவை மீண்டும் ஏற்படுத்துதல், விமான சர்வீஸ்களை மீண்டும் ஏற்படுத்துதல், ஒரு நாட்டின் மீது மற்றோர் நாட்டின் விமானம் பறக்க அனுமதித்தல் ஆகியவையே இன்னமும் பைசலாகாத பிரச்னைகள்; இத்துடன் 20 ஆண்டு காலமாகப் பைசலாகாமல் உள்ள காஷ்மீர் பிரச்னைக்கும் தீர்வு காணவேண்டி இருக்கிறது." இவ்வாறு அஜீஸ் அகமது சொன்னார்.
"1972-ல் பூட்டோ, இந்திரா காந்தி ஆகியோரினால் சிம்லா கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவைச் சகஜப்படுத்தும் பணி துவங்கியது; ஆனால் கடந்த 9 மாதங்களாக இந்தப் பணி அப்படியே தேக்கமடைந்துள்ளது" இவ்வாறு அகமத் சொன்னார்.