டபுள் ஆக்குபன்சி: வென்றதா நவீன ஆள்மாறாட்டம்?
இயக்குனர் அஸ்வின் கந்தசாமி இயக்கத்தில் நடிகர்கள் சந்தோஷ், ரேஷ்மா வெங்கடேஷ், சம்யுக்தா, வினோத் கிஷன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ளது டபுள் ஆக்குபன்சி திரைப்படம். இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். குஷ்பூ சுந்தர் மற்றும் பென்ஸ் மீடியா தயாரித்துள்ளனர்.
15 ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு குழந்தையை ஈன்றெடுக்கின்றனர் போஸ் வெங்கட், வினோதினி தம்பதியினர். ஆனால் பிறந்த அந்த ஆண் குழந்தை திடீரென பெண்ணாக மாறிவிடுகிறது. இதனால் அதிர்ச்சியடையும் அந்த தம்பதி திகைப்பிற்கு உள்ளாகின்றனர். ஒரு நாளின் 12 மணி நேரம் ஆணாகவும், 12 மணி நேரம் பெண்ணாகவும் மாறும் அந்த குழந்தையை யாருக்கும் தெரியாமல் வளர்கின்றனர் அந்த தம்பதி. இந்நிலையில் ஒரு கட்டத்தில் அவர்களும் சாலை விபத்தில் மரணிக்க அதன்பிறகு ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்துக் கொள்ள வாய்ப்பேதும் இல்லாத அந்த ஆண் மற்றும் பெண் ரஜினி என்ன ஆனது? வளர்ந்த பிறகு அவர்களுக்கு கிடைக்கும் காதல் இந்த குழப்பமான சூழலுக்கு மத்தியில் கைகூடியதா? இல்லையா? இவர்களின் இந்த அபூர்வ மாற்றத்தை கண்டுபிடிக்கும் வில்லன் பகவதி தன்னுடைய ஆராய்ச்சிக்காக அவர்களை பயன்படுத்த நினைத்தது நிறைவேறியதா? இல்லையா? என்பதுதான் இத்திரைப்படத்தின் கதை.
ஒரு வித்தியாசமான கதைக்களத்தை கையில் எடுத்துக் கொண்டு அதை எவ்வளவு விறுவிறுப்பாக கொடுக்க முடியுமோ அந்தளவு விறுவிறுப்பாக கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் அஸ்வின் கந்தசாமி. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பெண் ரஜினியாகவும், மாலை 6:00 மணி முதல் அதிகாலை ஆறு மணி வரை ஆண் ரஜினியாகவும் மாறி மாறி வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தக் கதாபாத்திரத்தின் சுவாரசியம் குறையாமல் கொடுக்கப்பட்டிருப்பது படத்திற்கு பெரும்பலம்.
இந்தத் திரைப்படத்தில் நாயகனாக சந்தோஷும் நாயகியாக ரேஷ்மாவும் நடித்துள்ளனர். ஆண் ரஜினியாக வரும் சந்தோஷ் துள்ளல் மிகுந்த நடிப்பால் கவனம் இருக்கிறார். அவருடைய கட்டுக்கோப்பான உடலும், காதல் ரசனைமிக்க முகபாவனைகளும் கதாபாத்திரத்திற்கு அருமையாக பொருந்தி போய் உள்ளது. சம்யுக்தாவுடன் அவர் செய்யும் காதல் சேட்டைகள் ரசிக்கும்படியாக அமைந்திருக்கிறது. பெண் ரஜினியாக உள்ள ரேஷ்மாவிடம் அவர் கோபப்படும் இடங்களிலும், அவள் மீதான கோபம் அர்த்தமற்றது என உணரும் தருணங்களிலும் மிகச் சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார் சந்தோஷ். காதல் கை நழுவும் இடங்களில் தவிப்புடன் அவர் வெளிப்படுத்தும் நடிப்பு படத்திற்கு கைகொடுத்துள்ளது.
Advertisement
Advertisement
ஆறு மணிக்கு மேல் ஆணாக மாறிவிடும் வாய்ப்பு கொண்ட ரேஷ்மாவின் தவிப்பு கலந்த நடிப்பு பார்வையாளர்களை கட்டிப்போடுவதில் சாதித்திருக்கிறது. தன்னுடைய இக்கட்டான நிலைமையை காதலன் வினோத்துக்கு சொல்ல முடியாமல் தவிக்கும் சூழலும், அதற்காக பிரயத்தனப்படும் இடங்களும் ரசிக்கச் செய்கின்றன. இதற்கு மத்தியில் அழகாக வந்து செல்கிறார் சம்யுக்தா. பணக்கார வீட்டுப் பெண்ணாக அவரது உடல் மொழி கச்சிதமாக பொருந்தியுள்ளது. இறுதிக் காட்சியில் அவர் காதலுக்காக உருகும் இடங்களில் ஸ்கோர் செய்கிறார். காதலிக்கு முத்தம் கொடுக்க வந்து ஆண் ரஜினியை முத்தமிடும் வினோத்தின் கதாபாத்திரம் நகைச்சுவையை அவ்வப்போது தூவுகிறது. இவர்களுக்கு மத்தியில் தன்னுடைய சிரிக்கச்செய்யும்படியான வசனங்களால் திரையில் சிரிப்பொலியை ஏற்படுத்துகிறார் விடிவி கணேஷ். இவர்களுடன் போஸ் வெங்கட் வினோதினி பகவதி ஆகியோர் நடித்துள்ளனர். குறைவான, அளவான கதாபாத்திரங்கள், அடுத்தது என்ன? என எதிர்பார்க்கச் செய்யும் திரைக்கதை, பொருத்தமான இடங்களில் அமைந்த பின்னணி இசை என படத்திற்கு பலம் சேர்க்க பல காரணிகள் உள்ளன.
முதல் பாதி முழுக்க விறுவிறுப்பாக செல்லும் திரைக்கதை இரண்டாம் பாதியில் ஒரே வட்டத்திற்குள் சுற்றுவதை போன்ற உணர்வு ஏற்படாமல் இருக்கவில்லை. சயின்ஸ் பிக்சன் படமாக காட்டி இருக்க வேண்டிய காட்சிகளை கடவுள் காட்சிகளாகக் காட்டியது ஏன் என்பது புரியவில்லை. கடவுள் அருளால் குழந்தை பிறப்பதாக சொல்லிவிட்டு டிஎன்ஏ, மரபணு, ஆராய்ச்சி என அறிவியல் வார்த்தைகளைக் கொண்டு எதற்கு பயன்படுத்தினார்கள் என்பது புலப்படவில்லை. கடவுள் அல்லது அறிவியல் என ஏதாவது ஒரு பாதையை தேர்ந்தெடுத்து கதையை நகர்த்தி இருக்கலாம்.
விறுவிறுப்பாக சென்ற காட்சியில் வில்லனின் தேவை எதுவும் சரியாக சொல்லப்படவில்லை. கிளைமாக்ஸ் காட்சிகள் கூட படத்தை முடிக்க வேண்டுமே என திணிக்கப்பட்ட காட்சிகளாகவே இருந்தன. ஒரே போன் காலில் கிடைக்கும் இதயம், திடீரென தியாகியாகும் சம்யுக்தா என பலவற்றை தவிர்த்திருக்கலாம்.
எனினும் ஒரு புது கதைக்களத்தை எடுத்து விறுவிறுப்பாக கொண்டு சென்று நல்ல பொழுதுபோக்கு படமாக வென்று இருக்கிறது டபுள் அக்குபஞ்சர்.