5.5.1976: கமிஷன் விசாரணை பற்றி நீதிபதி சர்க்காரியா அறிவிப்பு
கமிஷன் விசாரணை பற்றி நீதிபதி சர்க்காரியா அறிவித்தது குறித்து...
புதுடில்லி, மே, 4- தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் சில முன்னாள் தி.மு.க. அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களைப் பற்றி ஆராய நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக் கமிஷனின் நீதிபதி ஆர்.எஸ். சர்க்காரியா இன்று செய்தி ஸ்தாபனத்துக்கு அளித்த பேட்டியில் இந்த விசாரணை மே 14-ந் தேதி டில்லி விஞ்ஞான பவன் கட்டடத்தில் துவங்கும் என்றும் பத்திரிகை நிருபர்கள் அனுமதிக்கப்படுவர் என்றும் கூறினார்.
முதல் நாளன்று கமிஷனின் பணி பற்றிய பூர்வாங்க விவரங்களே விவாதிக்கப்படும் என்று எதிர்பாக்கப்படுகிறது.
விசாரணைக் கமிஷன் அடுத்து எப்போது கூடுவது என்பதுபற்றி மே 14-ந் தேதி தீர்மானிக்கப்படும்.
Advertisement
Advertisement
விசாரணைக்கு சர்க்கார் வக்கீல்
சென்னை, மே. 4 - சர்க்காரியா கமிஷன் நடத்தவிருக்கும் விசாரணை சம்பந்தமாக சென்னையைச் சேர்ந்த பிரபல வக்கீல் என்.டி. வானமாமலை அரசாங்க தரப்பு வக்கீலாக நியமிக்கப்படுகிறார்.
சர்க்காரியா கமிஷன் டில்லியில் வருகிற 14-ந் தேதி முதல் தடவையாகக் கூடுகிறது. அப்போது பிரபல வக்கீலான சாந்திபூஷண், முன்னாள் முதல்வர் கருணாநிதி சார்பில் ஆஜராவார்.
சர்க்காரியா கமிஷன் கூடும் முதல் நாளன்று ஆஜராகுமாறு கருணாநிதிக்கும் மற்றும் 6 முன்னாள் அமைச்சர்களுக்கும் தனிப்பட்ட நோட்டீசுகள் அனுப்பப்பட்டுள்ளன. எனினும் முதல் நாளன்று கமிஷன் இந்த விசாரணை சம்பந்தமாகப் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளையே தீர்மானிக்க இருக்கிறது என்பதால் அவர்கள் நேரில் ஆஜராகத் தேவையில்லை என்றும், அவர்களது வக்கீல்கள் ஆஜரானால் போதும் என்றும் இங்கு கிடைத்த தகவல்களிலிருந்து தோன்றுகிறது.
விசாரணைக் கமிஷன் இரண்டாவது தடவையாக சென்னையில் கூடுவதா அல்லது ஊட்டி போன்ற மலைவாச நகரில் கூடுவதா என்பது பற்றி முடிவு செய்ய இப்போது டில்லியில் இருக்கும் விசேஷ அதிகாரியான பி. விஜய ராகவன் நீதிபதி சர்க்காரியாவுடன் தொடர்புகொண்டுள்ளார்.
May 5, 1976: Justice Sarkaria announces details regarding the Commission's inquiry.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.