11.5.1976: ஹிந்தி எதிர்ப்பு பென்ஷன் திட்டம் நிறுத்தப்பட்டது
ஹிந்தி எதிர்ப்பு பென்ஷன் திட்டம் நிறுத்தப்பட்டது பற்றி...
சென்னை, மே. 10 - ஹிந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பென்ஷன் வழங்குவதை தமிழ்நாடு சர்க்கார் உடனடியாக நிறுத்திவிட்டார்கள்.
சுப்ரீம் கோர்ட் நகல் கிடைத்த பிறகு, ஏற்கனவே வினியோகிக்கப்பட்ட இந்தப் பென்ஷன் தொகைகளைத் திரும்பப் பெறுவது பற்றி சர்க்கார் பரிசீலனை செய்வார்கள் என்று த. நா. இரண்டாவது காரியதரிசி சி. வி. ஆர். பணிக்கர் இன்று நிருபர்களிடம் கூறினார்.
ஹிந்தி எதிர்ப்புக் கிளர்ச்சிக்காரர்களுக்கு பென்ஷன் வழங்குவது சட்டவிரோதமானது என்று சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து த.நா. சர்க்கார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார்கள்.
Advertisement
தீர்ப்பு அறிவிக்கப்பட்ட பிறகு இந்தத் திட்டத்தின் கீழ் பென்ஷன் வழங்குவதை உடனடியாக நிறுத்திவிடும்படி கலெக்டர்களுக்கும், கஜானா அதிகாரிகளுக்கும் தந்தி மூலம் உத்தரவுகள் அனுப்பப்பட்டன.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் நகல் உத்யோக பூர்வமான வந்து சேர்ந்தவுடன், ஹிந்தி எதிர்ப்புக்காரர்களுக்குகெனவே கொடுக்கப்பட்டுள்ள பென்ஷன் தொகைகளைத் திரும்ப வசூலிப்பதற்கு நடவடிக்கை எடுத்துக் கொள்வது பற்றி சர்க்கார் பரிசீலனை செய்வார்கள் என்று காரியதரிசி கூறினார்.
திமுக மந்திரி சபை 1975 ஏப்ரல் மாதத்தில் ஹிந்தி எதிர்ப்பாளர் பென்ஷன் திட்டத்தை ஆரம்பித்தது. இந்தத் திட்டத்தின்படி சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு வழங்கப்படுவதைப் போல் ஹிந்தி எதிர்ப்பு கிளர்ச்சியில் பங்கு கொண்டவர்களுக்கும் மாதம் ரூ. 75 வழங்கும்படி உத்தரவிடப்பட்டது.
இதுவரையில் 1,471 ஹிந்தி எதிர்ப்பு கிளர்ச்சிக்காரர்களுக்கு மொத்தம் ரூ. 13,23,900 பென்ஷனாக வினியோகிக்கப்பட்டிருக்கிறது.
ஸ்ரீலங்கா - இந்தியா கடல் எல்லை உடன்பாடு அமலுக்கு வந்துவிட்டது
புதுடில்லி, மே. 10- மார்ச் 23ந் தேதியன்று கையெழுத்தான இந்தியா - ஸ்ரீலங்கா கடல் எல்லை ஒப்பந்தம் இன்றிலிருந்து அமலுக்கு வருகிறது. உடன்பாடு பற்றிய ஊர்ஜித பத்திரங்களை இரு நாடுகளும் இன்று டில்லியில் பரிமாறிக் கொண்டன.
இந்தியாவுக்கும் இலங்கைக்கு மிடையிலுள்ள நட்புறவு சுலபமான பிரச்னைகளையும் கடினமான பிரச்னைகளையும் தீர்த்துக்கொள்ள உதவி வந்திருக்கிறது. இந்த ஊர்ஜித பத்திரங்கள் பரிவர்த்தனை அந்த நட்புறவுக்கு மற்றொரு எடுத்துக் காட்டாகும் என்று இந்திய வெளி விவகார இலாகா தாற்காலிக காரியதரிசி ஜே. எஸ். மேத்தா கூறினார். ...