8.5.1976: பெரு நகர்களில் புது தொழில் நிறுவ லைசென்ஸ் கிடைக்காது
பெரு நகர்களில் புது தொழில் நிறுவ லைசென்ஸ் கிடைக்காது...
புது டில்லி, மே. 7- பத்து லட்சமும் அதற்கு மேலும் மக்கள் தொகை உள்ள நகரங்களில புதிய தொழில்களை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் இனி லைசென்சுகளை வழங்காது.
இதை இன்று லோக்சபையில் தொழில் சிவில் சப்ளை இலாகா அமைச்சர் டி.ஏ. பை அறிவித்தார்.
பெரிய நகரங்களில் ஜன நெரிசலைத் தவிர்ப்பதும், பின்தங்கிய பகுதிகளில் தொழில்கள் பரவலாக அமைவதை ஊக்குவிப்பதும் இதன் நோக்கங்களாகும் என்றார் அமைச்சர். அமைச்சரின் அறிவிப்பை அங்கத்தினர்கள் கைதட்டி வரவேற்றனர். பின்தங்கிய பகுதிகளின் வளர்ச்சிக்காக தம்முடைய அமைச்சகத்தின் புதிய கொள்கையை விளக்கிப் பேசுகையில், எனினும் விரி வமைப்பு, நவீன மயமாக்குதல் ஆகியவற்றிற்காக மட்டும் பெரிய நகரங்களில் இப்போதைய தொழில் நிறுவனங்களுக்குப் புதிய லைசென்சுகள் வழங்கப்படும்.
Advertisement
Advertisement
தொழில் லைசென்சுகள், அவற்றின் நோக்கங்களுக்கு ஏற்பவும், ஓராண்டுக்குள்ளாகவும் அமல்படுத்தப்படாவிடில், அந்த லைசென்சுகளை ரத்து செய்வதற்கு வகை செய்யும் தொழில் வளர்ச்சி சட்டத்தை விரைவில் திருத்த அரசு உத்தேசித்துள்ளது என்று பை அறிவித்தார். ...
தமிழ்நாட்டில் ஹிந்தி எதிர்ப்பு கிளர்ச்சிக்காரருக்கு பென்ஷன் தரும் திட்டம் செல்லாது - சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
புது டில்லி, மே. 7- தமிழ் நாட்டில் ஹிந்தி எதிர்ப்புக் கிளர்ச்சிக்காரர்களுக்குப் பென்ஷனை அனுமதித்து 1974-ல் தமிழ்நாடு சர்க்கார் செயல்படுத்திய திட்டம் செல்லாது என்று சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு கூறியது.
இத்திட்டம் அரசியல் சட்டத்துக்கு முரணானது என்றும், இத் திட்டத்தில் பிரிவினைத் தீமையும், பிரிவினைப் போக்குகளைத் தூண்டுவதும் அடங்கியுள்ளது என்றும் கோர்ட் குறிப்பிட்டது.
முந்தைய தி.மு.க. அரசு இத் திட்டத்தைக் கொண்டு வந்தது. முதலமைச்சராக இருந்த கருணாநிதி 1974 ஆகஸ்டில் மாநில அசெம்பிளியில் சமர்ப்பித்த துணை பட்ஜெட்டில் இப் பென்ஷன் இடம் பெற்றிருந்தது.
சுப்ரீம் கோர்ட்டின் மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்சு தமிழக சர்க்காருக்குப் பென்ஷன் திட்டத்தை அமல் நடத்த வேண்டாமென்று உத்தரவிட்டது. ஹிந்தி அல்லது வேறு எந்த மொழிக்கும் எதிராக உணர்ச்சிகளை தூண்டி விடுவதில் எந்த மாநிலமாவது ஈடுபடுத்தப்பட்டால், அவ்வாறு தூண்டுவதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். ஏனெனில் இத்தகைய செயல் தேசவிரோதமான, ஜனநாயக விரோதமான போக்காகும் என்று பெஞ்சு கூறியது.
இத்திட்டத்தின் கீழ் இதுவரை யாருக்கு எவ்வளவு பென்ஷன் கொடுக்கப்பட்டிருந்தாலும் சரி, அது சட்ட விரோதமானது என்றும், அரசியல் சட்டத்துக்கு முரணானது என்றும் கோர்ட் குறிப்பிட்டது. இதுவரை கொடுக்கப்பட்ட பென்ஷன் தொகையைத் திருப்பிச் செலுத்துமாறு கோர சர்க்காருக்குத் தகுதி உண்டு என்று கோர்ட் தெரிவித்தது.
ஆர்.ஆர். தளவாய் இத் திட்டத்தை அரசியல் சட்டம் 351வது ஷரத்துக்கு முரணானது என்று ஆட்சேபித்து முதலில் சென்னை ஹைகோர்ட்டில் வழக்குத் தொடுத்தார். அவரது மனுவை ஹைகோர்ட் டிஸ்மிஸ் செய்தது. பின்னர் அவர் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் தாக்கல் செய்தார்.
May 8, 1976: Licenses for establishing new industrial units will not be granted in major metropolitan areas.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.