ஈறுகளில் ரத்தம் கசிவது ஈறுகளில் ஏற்படும் பெரியோடண்டைடிஸ் (Periodontitis) எனப்படும் ஈறு சம்பந்தப்பட்டநோய்ஆகும்.
ஈறு நோய் ஏற்பட என்ன காரணம்?
பற்கள் மற்றும் பல் இடைவெளியில் மென்மையான உணவு பசை போல் படிந்து நாளடைவில் பிளாக் என்ற படிமானமாக மாறும். இதன் விளைவாக ஈறுகளில் காயம் ஏற்பட்டு ஈறுகள் பல் துலக்கும் போது ரத்தம் கசிதல், பல் கூச்சம், பல் சீழ் ஏற்படுதல் ஆகிய நோய் உண்டாக காரணமாகிறது.
ஈறுகளில் நோய் ஏற்படாமல் எவ்வாறு தடுக்கலாம்?
பற்களை தினமும் இரண்டு முறை துலக்க வேண்டும், கடினமான உணவு (கொய்யா, பட்டாணி, கரும்பு ) போன்றவர்றை நன்றாக கடித்து, மென்று உண்ண வேண்டும், தண்ணீர் நிறைய பருக வேண்டும்.
ஈறுகள் இறங்கி கொண்டே போவதன் காரணம் என்ன?
பல காரணங்களால் ஈறுகள் இறங்க நேரிடும், அதிகமாக ஈறுகளின் படிமான உணவு பசை பிளாக் (plaque) மற்றும் அதன் மஞ்சலான டார்டார் ( tartar) என்ற கிருமிகள் சேர்ந்த பசையால் நேரிடுகிறது.
சிலருக்கு பற்கள் ஆட ஆரம்பிக்கிறது, காரணம் என்ன?
ஈறுகளில் பெரியோடானடைடிஸ் என்ற ஈறுகளில் ஏற்படும் நோய் பாதிப்பு அதிகம் ஆகும் போது சுற்றி பற்களை பிடித்திருக்கும் எலும்பு கரைவதால், பற்கள் ஆட நேரிடும்.
சரியான சமயத்தில் ஈறுகளில் மஞ்சள் நிற படிமானங்களை (tartar) பல் மருத்துவர் நீக்கும் சிகிச்சை செய்வதன் மூலம்தான் சரி செய்ய முடியும். அதிக பாதிப்பு ஏற்பட்டிருந்தால், ஈறுகளின் அடிப்பகுதியில் ப்ளாப் (flap) அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தலாம். இந்த அறுவை சிகிச்சை லேசர் பயன்படுத்தி செய்யலாம்.
ஈறுகளில் லேசர் அறுவை சிகிச்சை செய்வது எதற்காக?
ஈறுகள் அதிகமாக பாதிப்பு ஏற்பட்டிருந்தால் லேசர் பயன்படுத்தும் போது ஈறுகளில் தங்கியிருக்கும் கிருமிகளை அழிப்பதுடன், விரைவில் சிகிச்சையின் பின் ஈறுகள் வலுவடைய உதவும்.
ஈறு அறுவை சிகிச்சை செய்தால் மீண்டும் பல முறை செய்ய வேண்டியிருக்குமா?
இல்லை, சரியான நேரத்தில் முறையாக பராமரித்து வந்தால் மீண்டும் அறுவை சிகிச்சை செய்து கொண்டே இருக்கும் நிலை நிச்சயமாக வராது.
எத்தகைய உணவு ஈறுகளை பலப்படுத்தும்?
உணவில் கால்சியம் கொண்ட பால், கனிகளில் கொய்யா, வாழை, மற்றும் எள் போன்றவை , மீன், முட்டை போன்ற உணவு ஈறுகளை உறுதிபடுத்தும்.
பற்களின் இடைவெளியில் உணவு மாட்டிக் கொள்வதை தடுக்க என்ன செய்யலாம்?
பற்களை பல் மருத்துவரிடம் அதற்கான கருவியால் சுத்தம் செய்து பல் இடைவேளியை சீர் செய்ய வேண்டும். சில சமயங்களில் பல் செராமிக் கேப் செய்து குணப்படுத்தலாம்.
ஒன்று அல்லது இரண்டு பல் இழுக்க நேரிட்டால் மற்ற பற்கள் பாதிப்பு அடையுமா?
ஆம் பற்கள் ஒன்றன் மேல் ஒன்று இறுக்கமாக இருந்து செயல்பட வேண்டும். எடுக்கப்பட்ட பின்னர் அதன் எதிர் பல் எதிர் நேர் பல் இல்லாத திசையில் இருக்கவும் மற்றும் இழந்த பற்களின் அருகில் உள்ள பற்கள் இழந்த பற்களின் திசையில் சரியவும் நேரிடுகிறது. இதனால் இயற்கையான வலுவினை இழக்கிறது.
ஈறுகள் சுத்தம் செய்தல் பற்களை தேய்மானம் ஆகிவிடுமா?
இல்லை அல்ட்ராசானிக் கிளினர் என்ற கருவி பயன்படுத்துவதன் மூலமே பல் மருத்துவர் சுத்தம் செய்து கொடுப்பார். இந்தக் கருவி ஒலியை பயன்படுத்தி செயல்படுவதால் பற்கள் சிறிய கீறல் கூட ஏற்படாது.
ஈறு நோயால் உடல் பாதிப்பு ஏற்படுமா?
ஆம். ஈறுகளில் ஏற்படும் கிருமிகள் மற்றும் பசை போன்ற ப்ளாக் ஆகியவை சிறிது சிறிதாக குடலில் உணவுடன் கலந்து செல்வதால், பாதிப்பு ஏற்படுகிறது.
மவுத் வாஷ் வாய் கொப்பளித்து நல்லதா?
ஆம். இருமுறை பல் துலக்கி பின்னர் மவுத் வாஷ் பயன்படுத்தலாம்.
எந்த பல் பசை மற்றும் பிரஷ் பயன்படுத்தலாம்?
ப்ளோரைடு கொண்டுள்ள பல் பசை பயன்படுத்தலாம் உங்கள் பல் மருத்துவர் இதற்கு உதவுவார். மென்மையான (சாஃப்ட்) மற்றும் மீடியம் பிரஷ் பயன்படுத்தலாம்.
வாய் துர்நாற்றம் எதனால் ஏற்படுகிறது?
நமக்கு வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்துவது பெரும்பாலும் வயிறு சம்பந்தமான பாதிப்புக்களால்தான். முறையாக சிகிச்சை செய்து கொண்டால் சரி செய்து விடலாம்.
- டாக்டர் ஆர்.சிவ பிரகாஷ்