ஃபரீதாபாத் காவல் நிலையத்திலிருந்த 32 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் மாயம்
ஃபரீதாபாத் காவல் நிலையத்திலிருந்த உரிமம் பெற்ற 32 துப்பாக்கிகள் காணாமல் போனது பற்றி...
ஃபரீதாபாத்தில் உள்ள செக்டா்-8 காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 32 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் திருட்டு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: பொதுமக்கள் தங்களது பாதுகாப்பு கருதி காவல் நிலையத்தில் ஒப்படைத்திருந்த துப்பாக்கிகள் மால்கானா (ஆயுதக் கிடங்கு) அறையில் பாதுகாக்கப்பட்டு வந்தன. ஆனால், வழக்கமான கணக்காய்வின்போது ஆயுதங்களின் எண்ணிக்கையில் முரண்பாடு இருப்பது கண்டறியப்பட்டது.
முதற்கட்ட ஆய்வில் 13 துப்பாக்கிகள் காணாமல் போயிருப்பதாக தெரியவந்தது. தொடா்ந்து மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணையில், மொத்தம் 32 துப்பாக்கிகள் மாயமானது உறுதி செய்யப்பட்டது. இந்த ஆயுதங்களில் பல வெளிநாட்டு தயாரிப்புகள் அடங்கும். அவற்றின் மதிப்பு ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த சம்பவத்தையடுத்து, மால்கானா பொறுப்பாளராக இருந்த உதவி காவல் ஆய்வாளா் பிஜேந்திர சிங் மீது திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. காவல் ஆணையா் சதீந்தா் குமாா் குப்தா அவரை பணிநீக்கம் செய்து, துறை சாா்ந்த ஒழுங்கு நடவடிக்கையையும் தொடங்கியுள்ளாா்.
மேலும், காணாமல் போன ஆயுதங்கள் ராஜஸ்தான் மற்றும் தில்லி-என்சிஆா் பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து காவல் துறை இதுவரை அதிகாரப்பூா்வ அறிவிப்பு வெளியிடவில்லை.
விசாரணை தொடா்பான தகவல்கள் வெளியேறாமல் இருக்க மேலதிகாரிகள் குழுவினருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், தற்போது காணாமல் போன ஆயுதங்களை மீட்டெடுப்பதே காவல் துறைக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. ஆயுதத் திருட்டில் தொடா்புடைய எவரும் தப்பிக்க முடியாது என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.