முகப்பு
இந்தியா

திரிணமூல் கட்சிக்கு எதிராக விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்தும் மத்திய அரசு

திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகளை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பயன்படுத்துவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

Updated On : 11 மே 2013, 11:12 pm IST
பகிர்:

திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகளை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பயன்படுத்துவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் பர்த்வான் நகரில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுகையில் அவர் இதைத் தெரிவித்தார். அவர் மேலும் பேசியதாவது:

மாநிலத்தின் நற்பெயரைக் குலைக்க முழு அளவில் சதி நடக்கிறது. எங்களைப் பணியாற்ற விடாமல் தடுப்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வின் ஒரு பகுதி ஆகியவை இந்தச் சதித் திட்டத்தைத் தீட்டியுள்ளன.

Advertisement

Advertisement

எனது அரசுக்கு எதிராகவும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு எதிராகவும் விசாரணை நடத்த மத்திய அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. நிலக்கரிச் சுரங்க ஊழல் நாயகர்கள் எங்களுக்கு எதிராகச் சதி செய்கின்றனர்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் எங்கள் கட்சி இடம்பெற்றிருந்தபோதே திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்களிடம் வருமான வரித்துறை சோதனை நடத்த முயற்சி நடைபெற்றது. எங்கள் கட்சி எம்.பி.க்கள் தொடர்புடைய ஆவணங்கள் கேட்கப்பட்டன. நான் பிரதமரைச் சந்தித்தபோது இந்த நடவடிக்கையைத் தொடருங்கள் என்று கூறினேன்.

""நாங்கள் உங்களுடன் இருந்தாலும் கெடுதல் நடக்கிறது. நாங்கள் உங்களுடன் இல்லா விட்டாலும் கெடுதல்தான் நடக்கிறது'' என்று அவரிடம் கூறினேன்.

தாங்கள் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆகியோர் மீது ஊழல் வழக்கு போட முடிந்ததாகவும், ஆனால் என் மீது வழக்கு போட முடியவில்லை என்றும் அவர்கள் (காங்கிரஸôர்) கூறுகின்றனர். எனது புகழைக் குலைக்க முடியாத காரணத்தால் என்னை ஊழல் வழக்கில் சிக்க வைக்க மத்திய அரசு விரும்பியது. முடிந்தால் அவர்கள் என் மீது கை வைத்துப் பார்க்கட்டும். நெருப்புடன் விளையாடாதீர்கள் என்று தில்லி அரசர்களையும் அரசிகளையும் எச்சரிக்கிறேன்.

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் நாம் தில்லியில் அரசை மாற்றுவோம். நான் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்வேன்.

தில்லி என்பது யாருக்கும் சொந்தமானது அல்ல. மக்களின் சொத்தான அது, எந்தக் குறிப்பிட்ட கட்சிக்கும் சொந்தமானது கிடையாது.

மக்களவைத் தேர்தல் அடுத்த மூன்று முதல் 6 மாதங்களுக்குள் நடைபெறும். இத்தேர்தலில் காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் தோல்வி அடைவதை நான் உறுதிசெய்வேன். எத்தனைக் காலம் உங்களால் ஆட்சியில் இருக்க முடியும்? நான் சதியை முறியடிப்பேன் என்றார் மம்தா பானர்ஜி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.