முகப்பு
இந்தியா

பிரதமரே ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருப்பது கவலை அளிக்கிறது: டி. ராஜா

பிரதமரே ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருப்பது கவலை அளிக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர்

Updated On : 22 மே, 2013 at 2:22 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:11 PM

பிரதமரே ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருப்பது கவலை அளிக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி. ராஜா குறை கூறினார்.

ஜக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்து புதன்கிழமை (மே 22) நான்கு ஆண்டுகள் நிறைவடைவதையடுத்து, மத்திய அரசின் செயல்பாடு குறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் டி. ராஜா செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

உரம், டீசல் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை இந்த அரசு குறைத்துவிட்டது. இதன் எதிரொலியாக விலைவாசி உயர்ந்து விட்டது.  வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது;

Advertisement

ரயில் பயணக் கட்டணத்தை மத்திய அரசு அண்மையில் உயர்த்தியது.

மறுபுறம் கார்பரேட் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகளை வழங்குவதில் மத்திய அரசு ஆர்வமாக உள்ளது. இதனால், பல துறைகளில் ஊழல் அதிகரித்துள்ளது. பிரதமரே ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருப்பது கவலை அளிக்கிறது. 

வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆயுதப்படைகள் சிறப்புச் சட்டம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்பதை கண்டும், காணாமலும் மத்திய அரசு உள்ளது. அதனால், அந்த மாநிலங்களில் பதற்றம் நீடிக்கிறது.

இலங்கை பிரச்னையில் தமிழர்களின் நலன்களைக் காக்க மத்திய அரசு தவறி விட்டது.  இலங்கைக் கடற்படையினரால் தமிழக, புதுச்சேரி மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்பதில் இந்த அரசின் கையாளாகாத போக்கு வேதனை அளிக்கிறது.

தனது நான்கு ஆண்டு ஆட்சியில் சாமானிய மக்களுக்கு வேதனையையும் கண்ணீரையும் தந்ததைத் தவிர வேறு எதையும் மத்திய அரசு செய்யவில்லை என்று ராஜா கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.