முகப்பு
இந்தியா

குடும்ப அரசியல் நடத்தும் காங்கிரஸ்: அருண் ஜேட்லி குற்றச்சாட்டு

காங்கிரஸ் கட்சி குடும்ப அரசியல் நடத்தி வருவதாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான அருண் ஜேட்லி குற்றம் சாட்டி உள்ளார்.

Updated On : 1 ஜூன், 2013 at 11:21 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:11 PM

காங்கிரஸ் கட்சி குடும்ப அரசியல் நடத்தி வருவதாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான அருண் ஜேட்லி குற்றம் சாட்டி உள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் சனிக்கிழமை நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் ஜேட்லி பேசியதாவது:

ஆட்சிப் பொறுப்பை ராகுல் காந்திக்கு வழங்குவதற்கான முயற்சியில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டு வருகிறது. இதன் மூலம் இந்திய ஜனநாயகம் வம்சாவழி அடிப்படையிலானதா? என்ற கேள்வி எழுகிறது.

Advertisement

இந்த நேரத்தில், நாட்டை வழிநடத்த வேண்டியது ஒரு குறிப்பிட்ட குடும்பத்தைச் சேர்ந்த தலைவர் மட்டுமா, மாநிலங்களா அல்லது திறமையான ஒருவரா என்பது குறித்த விவாதத்தைத் தொடங்கி வைக்க வேண்டியது அவசியமாகிறது.

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், எல்.கே. அத்வானி, நரேந்திர மோடி, சிவராஜ் சிங் செüகான் மற்றும் ரமண் சிங் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் குடும்பப் பின்னணியின் அடிப்படையில் அல்லாமல் தங்களுடைய கடின உழைப்பின் மூலம் மட்டுமே உயர்ந்தார்கள்.

பிரதமர் மன்மோகன் சிறந்த நிர்வாகத்தைத் தரத் தவறி விட்டார். மாறாக, அவரது தலைமையிலான அரசு நமது வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஊழல் மலிந்த அரசாக மாறிவிட்டது.

இதுவரை இல்லாத வகையில், முதன்முறையாக அரசின் செயல்பாடுகள் முடங்கிக் கிடக்கின்றன. பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக சரிந்துள்ளது. இது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது.

நாடு முழுவதும் நக்சல்களை ஒடுக்க நடவடிக்கை எடுத்துவருவதாக மத்திய அரசு கூறிவரும் நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரே நாளில் நிகழ்ந்த தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது.

ப.சிதம்பரம் உள் துறை அமைச்சராக இருந்த போது, நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ள நக்சல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார். இவரது இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் மற்றும் மணி சங்கர் அய்யர் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நாட்டிலேயே நக்சல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும் அரசு என்றால் அது ரமண் சிங் தலைமையிலான சத்தீஸ்கர் அரசு மட்டும்தான்.

சிவராஜ் சிங் செüகான் தலைமையிலான மத்தியப் பிரதேச பாஜக அரசு, சாலை, மின்சாரம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை உள் கட்டமைப்பு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.