முகப்பு
இந்தியா

புதிய ராணுவ தளவாட கொள்முதல் கொள்கை அமலுக்கு வந்தது

முறைகேடுகளைத் தடுக்கவும், உள்நாட்டு தயாரிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கவும் வகை செய்யும் புதிய ராணுவ தளவாட கொள்முதல் கொள்கை சனிக்கிழமை அமலுக்கு வந்தது.

Updated On : 1 ஜூன், 2013 at 11:11 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:11 PM

முறைகேடுகளைத் தடுக்கவும், உள்நாட்டு தயாரிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கவும் வகை செய்யும் புதிய ராணுவ தளவாட கொள்முதல் கொள்கை சனிக்கிழமை அமலுக்கு வந்தது.

இதுதொடர்பாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பாதுகாப்பு துறைக்கான ராணுவ தளவாட கொள்முதல் கொள்கை 2013 ஜூன் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி, தளவாட கொள்முதல் தொடர்பான ஒப்பந்தப்புள்ளி நடவடிக்கைகள் வெளிப்படையானதாகவும், நேர்மையானதாகவும் இருக்கும்.

Advertisement

ராணுவ தளவாடங்களை உள்நாட்டில் தயாரிப்பதை ஊக்குவிக்கவும், கொள்முதல் நடவடிக்கையின்போது, உள் நாட்டு தயாரிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கவும் இதில் வகை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தொழில்துறையினர் பயன்பெறுவர் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி கூறுகையில், ""இந்த புதிய கொள்கை பாதுகாப்புத் துறைக்கும், தொழில் துறையினருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ராணுவ தளவாட கொள்முதல் நடவடிக்கைகளை விரைவாக முடிக்கும் வகையில் அதற்கான நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. இதனால் காலதாமதம் தவிர்க்கப்படும்'' என்றார்.

சமீபத்தில் அம்பலமான ஹெலிகாப்டர் பேர ஊழல் போன்ற முறைகேடுகளைத் தடுக்கவும் இந்தப் புதிய கொள்கை உதவும் என பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்புத் துறையை மேலும் பலப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்தாலோசித்த பிறகு அவை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.