கேரள முதல்வர் பதவி விலக மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
பல கோடி ரூபாய் சோலார் மோசடி குறித்த விசாரணை முடியும்வரை கேரள முதல்வர் உம்மன் சாண்டி பதவியில் தொடரக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ வலியுறுத்தியிருக்கிறது.
பல கோடி ரூபாய் சோலார் மோசடி குறித்த விசாரணை முடியும்வரை கேரள முதல்வர் உம்மன் சாண்டி பதவியில் தொடரக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ வலியுறுத்தியிருக்கிறது.
புது தில்லியில் பொலிட்பீரோ சார்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் விவரம்:
பல கோடி ரூபாய் சோலார் மோசடி விவகாரத்தில் கேரள முதல்வர் உம்மன் சாண்டி மீது கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அது தொடர்பான விசாரணை முடியும்வரை அவர் முதல்வர் பதவியில் தொடரக் கூடாது.
Advertisement
Advertisement
இந்த மோசடியை நடத்தியவர்களுடன் அவருக்குத் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். முதல்வர் உடனடியாக தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்.
மாநில அரசு இந்த மோசடியில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் செயலற்று இருப்பதை எதிர்த்து பொதுமக்கள் நடத்தும் போராட்டங்களை ஒடுக்க போலீஸôர் கையாளும் அடக்குமுறையை வன்மையாக கண்டிக்கிறோம் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் காற்றாலைகள், சோலார் பேனல்கள் அமைத்து தருவதாக பல கோடி ரூபாய் மோசடியில் பிஜு ராதாகிருஷ்ணன்- சரிதா நாயர் தம்பதி ஈடுபட்டனர்.
இவர்கள் இருவரும் கைதாகியுள்ளனர். முதல்வர் உம்மன் சாண்டியின் காவலரும் உதவியாளரும் இது தொடர்பாக கைதாகியுள்ளனர்.
முதல்வர் பதவி விலகவும் நீதி விசாரணை நடத்தவும் வலியுறுத்தி கடந்த பல நாட்களாக எதிர்க்கட்சிகள் கேரளம் முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்த விவகாரத்தை தொடர்ந்து வலியுறுத்தி பேரவையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருவதால் பேரவை நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.