முகப்பு
இந்தியா

ஹைதராபாத் நகரில் குண்டுகள் வைக்க பாகிஸ்தானில் இருந்து உத்தரவு வந்தது

பாகிஸ்தானில் உள்ள தங்களின் எஜமானர்களின் கட்டளைப்படியே ஹைதராபாதில் குண்டுவெடிப்பு சம்பவங்களை தாங்கள் நிகழ்த்தியதாக, கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதி யாசின் பட்கல் தெரிவித்துள்ளார்.

Updated On : 1 செப்டம்பர், 2013 at 11:13 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:19 PM

பாகிஸ்தானில் உள்ள தங்களின் எஜமானர்களின் கட்டளைப்படியே ஹைதராபாதில் குண்டுவெடிப்பு சம்பவங்களை தாங்கள் நிகழ்த்தியதாக, கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதி யாசின் பட்கல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நிகழ்ந்த பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான யாசின் பட்கல், இந்தியா-நேபாளம் எல்லையில் ஆகஸ்ட் 28-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

அவரிடம் புலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் தெரிய வந்துள்ள விவரங்கள் குறித்து அதிகாரிகள் வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: யாசின் பட்கலிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பயனுள்ள பல தகவல்கள் கிடைத்துள்ளன.

Advertisement

ஹைதராபாதில் கடந்த பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதி நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு, இந்தியன் முஜாஹிதீன் அமைப்புதான் பொறுப்பு என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

ஹைதராபாத் அருகேயுள்ள தில்சுக்நகரில் பல்வேறு இடங்களில் குண்டுகளை வைக்குமாறு, பாகிஸ்தானில் உள்ள தனது எஜமானர்களிடம் இருந்து பட்கலுக்கு கட்டளை வந்துள்ளது. அதன்படி அவர் செயல்பட்டுள்ளார்.

வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தை இந்தியாவில் வரிவுபடுத்துவதைத் தடுக்கும் நோக்கத்தில்தான், சைபராபாதில் அருகில் உள்ள தில்சுக்நகரில் குண்டுகள் வைக்கப்பட்டன என்று பட்கல் கூறியதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பட்கல் தனது மைத்துனர் இக்பால் மற்றும் ரியாஸ் பட்கல் ஆகியோர் குறித்த விவரங்களையும் புலனாய்வு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இக்பாலும், ரியாஸூம் இந்தியாவுக்கு வந்ததில்லை. இந்தாண்டு இறுதியில் நேபாளம் சென்ற இக்பால், அங்கிருந்து சாட்டிலைட் போன் மூலம், பாகிஸ்தானில் உள்ள தனது எஜமானர்களுடன் பேசியதாக பட்கல் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட பிறகு, ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிரான நடவடிக்கையை அமெரிக்கா தொடங்கியதும், ஆப்கானிஸ்தான் சென்று, கூட்டணிப் படைகளுக்கு எதிராகப் போராட பட்கல் விரும்பியுள்ளார். ஆனால் வாய்ப்புக் கிடைக்கவில்லை.

பல்வேறு நாடுகளிலும் சுற்றித் திரிந்த பட்கல், 2011-ல் தில்லிக்கு திரும்பினார். தில்லியின் புறநகரில் சட்டவிரோதமாக துப்பாக்கி தொழிற்சாலை ஒன்றை தொடங்கினார். பின்னர் அது கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.

அங்கு ராக்கெட் ஏவுகணைகள் மற்றும் இலகுரக எந்திரத் துப்பாக்கிகளை தயாரிக்க பட்கல் விரும்பியுள்ளார். இதிலிருந்தே பயங்கரவாத செயல்களில் பட்கலுக்கு எந்தளவுக்கு ஆர்வம் இருந்துள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று, தில்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.