பகுஜன் சமாஜில் இணைந்த பாஜக தலைவர் செளதரி மோகன்
பஞ்சாப் மாநில முன்னாள் எம்எல்ஏவான செளதரி மோகன் லால் பங்கா, பாஜகவில் இருந்து விலகி பகுஜன் சமாஜ் கட்சியில் வியாழக்கிழமை இணைந்தார். மோடி தலைமையிலான அரசு ஏழைகள்
பஞ்சாப் மாநில முன்னாள் எம்எல்ஏவான செளதரி மோகன் லால் பங்கா, பாஜகவில் இருந்து விலகி பகுஜன் சமாஜ் கட்சியில் வியாழக்கிழமை இணைந்தார். மோடி தலைமையிலான அரசு ஏழைகள் மற்றும் தலித்துகளுக்கு எதிரான கொள்கைகளைக் கொண்டிருப்பதாக அவர் அதிருப்தி தெரிவித்தார்.
அவரோடு பஞ்சாயத்து தலைவர் பல்விந்தர் ராம், உறுப்பினர் ஜஸ்விந்தர் கெளர், மெஹ்லியானா கிராம முன்னாள் தலைவர் சுரிந்தர் சிங் ஆகியோரும் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தனர். அவர்களை பகுஜன் சமாஜ் கட்சியின் பஞ்சாப் மாநில பொறுப்பாளர் மேக்ராஜ் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
அப்போது, செளதரி மோகன் லால் பங்கா கூறியதாவது:
மோடி தலைமையிலான அரசின் ஏழைகள் மற்றும் தலித்துகளுக்கு எதிரான கொள்கைகளால் அதிருப்தி அடைந்தேன். இறுதியாக, மோடி அரசுக்கு ஆதரவாக, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் பொறுமை இழந்தேன். எனவே தற்போது பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்துள்ளேன்' என்றார்.
செளதரி கட்சியில் இணைந்தது குறித்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர்கள் கூறுகையில், 'இத்தனை நாள் வாடகை வீட்டில் இருந்த செளதரி மோகன், தற்போது தனது சொந்த வீட்டுக்கு திரும்பியுள்ளார்' என்று கூறினர்.
செளதரி மோகன் கடந்த 1997 மற்றும் 2007-ஆம் ஆண்டுகளில் பஞ்சாப் மாநிலம் பங்கா தொகுதியில் அகாலி தளம் கட்சி சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவரது தந்தையும், முன்னாள் மாநில அமைச்சருமான செளதரி ஸ்வர்ன ராம், அதே காலகட்டத்தில் பக்வரா தொகுதியில் பாஜக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
பஞ்சாப் மாநில அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினராக இருந்த செளதரி மோகன், 2015 அக்டோபரில் சீக்கியர்களின் புனித நூல் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அந்தப் பதவியை ராஜிநாமா செய்தார். அதையடுத்து அவர் பாஜகவில் இணைந்திருந்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.