முகப்பு
இந்தியா

புந்தேல்கண்ட், பூர்வாஞ்சல் வளர்ச்சி வாரியங்கள்: உ.பி. அமைச்சரவை ஒப்புதல்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள புந்தேல்கண்ட் மற்றும் பூர்வாஞ்சல் பகுதிகளுக்கு வளர்ச்சி வாரியங்கள் அமைக்க அந்த மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Updated On : 26 டிசம்பர் 2018, 12:59 am IST
பகிர்:


உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள புந்தேல்கண்ட் மற்றும் பூர்வாஞ்சல் பகுதிகளுக்கு வளர்ச்சி வாரியங்கள் அமைக்க அந்த மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த வாரியங்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் அல்லது அவர் நியமனம் செய்யும் ஒருவர் தலைமை வகிப்பார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து பிரித்து, புந்தேல்கண்ட் மற்றும் பூர்வாஞ்சல் பகுதிகளை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வந்த நிலையில், அவ்வாறு செய்ய முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், லக்னௌவில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் வளர்ச்சி வாரியங்கள் அமைக்கவும், வர்த்தகர்கள் நல வாரியம் அமைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சரவை கூட்டத்துக்குப் பிறகு மூத்த அமைச்சர் சித்தார்த்நாத் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புந்தேல்கண்ட் மற்றும் பூர்வாஞ்சல் வளர்ச்சி வாரியங்கள் அமைக்க அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. வாரியத்தின் தலைவராக முதல்வர் அல்லது அவர் நியமனம் செய்பவர் பதவி வகிப்பார். 2 துணைத் தலைவர்களும், 2 நிபுணர்களும், 12 அரசு உறுப்பினர்களும், 11 அரசு சாரா உறுப்பினர்களும் வாரியத்தில் இடம் பெற்றிருப்பர். அவர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகளாகும். 
ஜிஎஸ்டி தொடர்பாக, வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை சரிசெய்வதற்காக வர்த்தகர்கள் நல வாரியம் அமைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் தலைவராக முதல்வர் பதவி வகிப்பார். 3 துணைத் தலைவர்களும், 11 அரசு சாரா உறுப்பினர்களும் இதில் இடம் பெறுவர். இந்த வாரியத்தின் கூட்டம் 3 மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும்.
பணியின்போது உயிரிழக்கும் போலீஸாரின் குடும்பத்தினருக்கு மட்டுமே இதுவரை ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. இனி, பணியின்போது பலத்தகாயம் ஏற்பட்டு கோமா நிலைக்கு செல்லும் போலீஸாருக்கும் ஓய்வூதியம் வழங்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நொய்டாவில் ரூ. 2, 300 கோடி செலவில் மென்பொருள் நிறுவனம் அமைப்பதற்கு டாடா நிறுவனம் வாங்கவிருக்கும் இடத்துக்கு 25 சதவீதம் மானியம் வழங்குவதற்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது என்றார் சித்தார்த்நாத் சிங்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments