ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த முழு தடை விதிக்க முடியாது
தில்லியில் ஜந்தர் மந்தர், போட் கிளப் போன்ற இடங்களில் போராட்டங்கள் நடத்துவதற்கு முழுமையான தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தில்லியில் ஜந்தர் மந்தர், போட் கிளப் போன்ற இடங்களில் போராட்டங்கள் நடத்துவதற்கு முழுமையான தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:
ஜந்தர் மந்தர், இந்தியா கேட் அருகில் உள்ள போட் கிளப் ஆகிய இடங்களில் போராட்டம் நடத்துவதற்கு முழுமையான தடை விதிக்க முடியாது. இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு தடை விதிப்பது தொடர்பாக, மத்திய அரசு விதிமுறைகளை வகுக்க வேண்டும். மக்கள் போராட்டம் நடத்துதற்கு உரிமை உள்ளது; அதே சமயம், மக்கள் அமைதியான சூழலில் வசிப்பதற்கும் உரிமை உள்ளது. முரண்பாடான இந்த உரிமைகளுக்கு இடையே சமநிலையைப் பேண வேண்டியது அவசியமாகும் என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர். முன்னதாக, தலைநகர் தில்லியில் ஜந்தர் மந்தர் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்துவதற்கு தடை விதித்து தேசியப் பசுமை தீர்ப்பாயம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உத்தரவிட்டது.
அந்த உத்தரவில், கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் எழுப்பப்படும் இரைச்சல் சப்தங்களின்றி, மக்கள் அமைதியான சூழலில் வசிப்பதற்கான உரிமையை அளிக்க வேண்டியது மாநில அரசுகளின் கடமையாகும். ஆனால், தலைநகர் தில்லியின் இதயப்பகுதியாக விளங்கும் கன்னாட் பிளேஸுக்கு மிக அருகில் உள்ள ஜந்தர் மந்தர் சாலையில், சுற்றுச்சூழல் மாசு இல்லாமல் மக்கள் வசிப்பதற்கான உரிமையை மாநில அரசு அளிக்கத் தவறிவிட்டது.
ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபடுவதால், இரைச்சல், தூய்மையின்மையால் சுகாதார சீர்கேடுகள் ஆகிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே, ஜந்தர் மந்தருக்குப் பதிலாக, அஜ்மீரி கேட் அருகில் உள்ள ராமலீலா மைதானத்தில் போராட்டங்களை நடத்தலாம்'' என்று தேசியப் பசுமை தீர்ப்பாயம் தெரிவித்திருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, மஸ்தூர் கிஸான் சக்தி சங்கதன் என்ற விவசாய அமைப்பு உள்பட பல்வேறு தரப்பினர், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த மனுக்களை உச்ச நீதிமன்றம், திங்கள்கிழமை மேற்கண்ட உத்தரவை பிறப்பித்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.