ருவாண்டாவில் பிரதமர் மோடி
ஆப்பிரிக்க நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, முதல்கட்டமாக ருவாண்டாவுக்கு திங்கள்கிழமை சென்றார். அந்நாட்டின் தலைநகர் கிகாலியில் அமைந்துள்ள
ஆப்பிரிக்க நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, முதல்கட்டமாக ருவாண்டாவுக்கு திங்கள்கிழமை சென்றார். அந்நாட்டின் தலைநகர் கிகாலியில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு சென்ற அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
அந்நாட்டின் அதிபர் பால் ககாமே உள்ளிட்ட தலைவர்களும், உயரதிகாரிகளும் பிரதமர் மோடியை வரவேற்றனர். ருவாண்டாவுக்கு இந்தியப் பிரதமர் ஒருவர் செல்வது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் பொருளாதார நல்லுறவுக்கான செயலர் திருமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ருவாண்டா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் பால் ககாமேவைச் சந்தித்துப் பேச உள்ளார். அப்போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர். பாதுகாப்புத் துறையில் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பான ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிகாலி சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் தொழில் பூங்காக்கள் அமைப்பதற்காக இந்தியா சார்பில் 10 மில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.680 கோடி) கடனுதவி அளிக்கும் திட்டமும் அப்போது இறுதி செய்யப்படக்கூடும். அதேபோன்று வேளாண் மற்றும் பாசனத் திட்டங்களுக்காக 10 கோடி டாலர் கடனுதவி அளிக்கும் திட்டம் தொடர்பான உடன்படிக்கையும் கையெழுத்தாக வாய்ப்புள்ளது.
இது ஒரு புறமிருக்க, ருவாண்டா அரசின் வீட்டுக்கொரு பசு அளிக்கும் திட்டத்தின் தொடக்க விழாவில் பங்கேற்கும் மோடி, இந்தியாவின் சார்பில் 200 பசுக்களை பயனாளிகளுக்கு வழங்க உள்ளார் என்றார் அவர்.
இரண்டு நாள்கள் ருவாண்டாவில் பயணம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் மோடி, அதன் பின்னர் உகாண்டா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்குச் செல்லவுள்ளார். தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். அங்கு சீன அதிபர் ஷீ ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்தித்துப் பேச உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது ஷீ ஜின்பிங்கும் ருவாண்டாவில்தான் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.