சபரிமலைக்குச் சென்ற இஸ்லாமிய பெண் ரெஹானா பாத்திமா கேரள ஜமா அத்திலிருந்து நீக்கம்
எதிர்ப்புகளை மீறி சபரிமலைக்குச் சென்று திருப்பி அனுப்பப்பட்ட இஸ்லாமிய பெண் ரெஹானா பாத்திமா தற்போது கேரள மாநில ஜமா அத்திலிருந்து நீக்கபட்டிருக்கிறார்.
திருவனந்தபுரம்: எதிர்ப்புகளை மீறி சபரிமலைக்குச் சென்று திருப்பி அனுப்பப்பட்ட இஸ்லாமிய பெண் ரெஹானா பாத்திமா தற்போது கேரள மாநில ஜமா அத்திலிருந்து நீக்கபட்டிருக்கிறார்.
கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்தவர் ரெஹானா பாத்திமா. பிரபல மாடல் அழகி. அனைத்து வயது பெண்களையும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பையடுத்து அங்கு சென்ற சில பெண்களில் ரெஹானா பாத்திமாவும் ஒருவர்.
இஸ்லாமிய மதத்தை சேர்ந்த இவர் ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்கான எந்த விரதமும் மேற்கொள்ளாமல், வழக்கமான நெய் தேங்காய், அரிசி கொண்ட இருமுடிக்குப் பதிலாக ஆரஞ்சு மற்றும் ஆப்பிள் பழங்களை இருமுடியாக கட்டிக்கொண்டு கடந்த 19-ம் தேதி ஐயப்பன் கோவிலுக்குள் நுழைய முயன்றார். ஆனால் போராட்டக்காரர்களின் எதிர்ப்பு மற்றும் கேரள முதல்வரின் உத்தரவையடுத்து அவரை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.
இந்நிலையில் ரெஹானா பாத்திமா தற்போது கேரள மாநில ஜமா அத்திலிருந்து நீக்கபட்டிருக்கிறார்.
இதுதொடர்பாக கேரள மாநில முஸ்லிம் ஜமாஅத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜி ஏ.பூக்குன்ஜு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
ரெஹானா பாத்திமா என்ற முஸ்லிம் பெயரை வைத்துகொண்டு ஐயப்பன் கோவிலுக்குள் தரிசனம் செய்ய முயன்றதன் மூலம் இந்துக்களின் உணர்வுகளையும், சடங்கு, சம்பிரதாயங்களையும் அவர் காயப்படுத்தியுள்ளார்.
எனவே, இஸ்லாம் மதத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். ரெஹானாவையும் அவரது குடும்பத்தாரையும் தள்ளிவைக்குமாறு எர்ணாகுளம் மத்திய முஸ்லிம் ஜமாஅத்-ஐ அறிவுறுத்தி இருக்கிறோம்.
இஸ்லாமிய சமுதாயத்தின் பெயரை பயன்படுத்தும் உரிமையும், முஸ்லிம் ஜமாஅத்துடன் இனி எந்தவொரு தொடர்பும் அவருக்கு கிடையாது
முஸ்லிம் பெயரை வைத்துகொண்டு பிறமதத்தினரின் உணர்வுகளை காயப்படுத்தியதற்காக சட்டப்பிரிவு 153-ஏ-வின்கீழ் அவர் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.