267 காவல் நிலையங்களில் தொலைபேசி வசதி இல்லை: மத்திய அரசு தகவல்
நாட்டில் 267 காவல் நிலையங்களில் தொலைபேசி வசதி இல்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாட்டில் 267 காவல் நிலையங்களில் தொலைபேசி வசதி இல்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களின் அடிப்படை வசதிகள் குறித்த தகவல்களை, மத்திய உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹீர், மாநிலங்களவையில் புதன்கிழமை தெரிவித்தார். அவர் கூறியதாவது:
நாடு முழுவதும் 15,650 காவல் நிலையங்கள் உள்ளன. அவற்றில், 863 காவல் நிலையங்களுக்குச் சொந்தக் கட்டடம் இல்லை. 273 காவல் நிலையங்களில் புதிய வாகனங்கள் இல்லை.
267 காவல் நிலையங்களில் தொலைபேசி வசதி இல்லை. 129 காவல் நிலையங்களில் வயர்லெஸ் வசதி இல்லை என்றார் அவர்.
தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு நோட்டீஸ்: அழைப்பு முறிவு தடுப்பு விதிகளைக் கடைப்பிடிக்காததால் பிஎஸ்என்எல், ஐடியா ஆகிய இரு தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, மக்களவையில் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:
கடந்த செப்டம்பர் வரையிலான காலாண்டின் அறிக்கையை தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) அண்மையில் அளித்தது. அதில், அஸ்ஸாம், ஜம்மு-காஷ்மீர், ஹிமாசலப் பிரதேசம், வடகிழக்குப் பிராந்தியம் ஆகிய 4 மண்டலங்களில் ஐடியா நிறுவனமும், மேற்கு வங்கத்தில் பிஎஸ்என்எல் நிறுவனமும் விதிமுறைகளைக் கடைப்பிடிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, அந்த இரு நிறுவனங்களிடமும் விளக்கம் கேட்டு கடந்த ஜனவரி மாதம் 18-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்றார் அவர்.
2,800 இணையதளங்கள் முடக்கம்: சமூகத்துக்கு தீங்கு விளைவிக்கும் கருத்துகளைக் கொண்ட 2,800 இணையதளங்கள் கடந்த 2018-ஆம் ஆண்டு முடக்கப்பட்டன என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் எஸ்.எஸ்.அலுவாலியா, மக்களவையில் தெரிவித்தார்.
இது, முந்தைய ஆண்டுகளை விட அதிகமாகும். கடந்த 2017-ஆம் ஆண்டில் 1,385 இணையதளங்களும், 2016-ஆம் ஆண்டில் 633 இணையதளங்களும் முடக்கப்பட்டன.