மேற்குவங்கத்தை வங்கதேசமாக்க முயற்சிக்கிறார் மம்தா: விஹெச்பி
மேற்குவங்க மாநிலத்தை வங்கதேசமாக்க முதல்வர் மம்தா பானர்ஜி முயற்சிக்கிறார் என்று விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பு (விஹெச்பி) குற்றம்சாட்டியுள்ளது.
மேற்குவங்க மாநிலத்தை வங்கதேசமாக்க முதல்வர் மம்தா பானர்ஜி முயற்சிக்கிறார் என்று விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பு (விஹெச்பி) குற்றம்சாட்டியுள்ளது.
கொல்கத்தாவில் பிடிஐ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, இந்த குற்றச்சாட்டை விஹெச்பி அமைப்பின் மூத்த தலைவர் சுரேந்திர ஜெயின் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
நாட்டிலேயே மிகப்பெரிய மதவாத சக்தி, திரிணமூல் காங்கிரஸ்தான். மேற்குவங்கத்தில் வாழும் சிறுபான்மை சமூகத்தினரை திருப்திப்படுத்துவதற்காக, ஹிந்துக்களை திரிணமூல் காங்கிரஸ் கஷ்டப்படுத்துகிறது. மேற்குவங்க மாநிலத்தை வங்கதேசமாக மாற்ற திரிணமூல் காங்கிரஸ் முயலுகிறது.
மேற்குவங்கத்தில் மதவாத பதற்றத்தை ஏற்படுத்த விஹெச்பி முயற்சிக்கவில்லை. அந்த முயற்சியில் திரிணமூல் காங்கிரஸ்தான் ஈடுபட்டுள்ளது.
தேசவிரோதிகளுக்கு திரிணமூல் காங்கிரஸ் அரசு பாதுகாப்பு கொடுக்கிறது. அதேநேரத்தில் தேசபக்தர்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. கையில் தேசியக் கொடியை வைத்துக் கொண்டு, பாரத மாதா வாழ்க என்று கோஷமிட்டால், அது மேற்குவங்கத்தில் குற்றமாகும் என்றார் ஜெயின்.
மேற்குவங்கத்தில் மத ரீதியில் பதற்றத்தை ஏற்படுத்துவதற்கு, பாஜகவும், விஹெச்பி அமைப்பும் முயற்சிப்பதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியிருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜெயின் இவ்வாறு தெரிவித்தார்.