போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்: உத்தவ் தாக்கரேவுடன் பட்னவீஸ் ஆலோசனை
மும்பையில் அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, சிவசேனைத் தலைவர் உத்தவ்
மும்பையில் அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, சிவசேனைத் தலைவர் உத்தவ் தாக்கரேவுடன் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் ஆலோசனை நடத்தினார்.
மும்பையில் பிருஹன் மும்பை மின்வாரியம் மற்றும் போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த 32,000 தொழிலாளர்கள் கடந்த ஒரு வாரமாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், நகரில் 3,200 பேருந்துகள் இயக்கப்படவில்லை.
மும்பை மாநகராட்சி பட்ஜெட்டையும், போக்குவரத்துக் கழக பட்ஜெட்டையும் ஒன்றாக இணைக்க வேண்டும்; ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில், சிவசேனைக் கட்சியின் தொழிலாளர் சங்கமான பெஸ்ட் காம்கர் சேனாவும் பங்கேற்றுள்ளது. மும்பை மாநகராட்சியில் ஆளும் கட்சியாக சிவசேனைக் கட்சி உள்ளது. மேலும், அக்கட்சியைச் சேர்ந்த மேயர், போக்குவரத்துக் கழகத்தின் தலைவராக உள்ளார். இந்நிலையில், மும்பை மாநகராட்சி பட்ஜெட்டையும், போக்குவரத்துக் கழக பட்ஜெட்டையும் ஒன்றாக இணைப்பதற்கு சிவேசனை தலைவர் உத்தவ் தாக்கரே ஞாயிற்றுக்கிழமை ஆதரவு தெரிவித்தார்.
மேலும், தொழிலாளர்களின் கோரிக்கைக்கு பேச்சுவாரத்தை மூலமே தீர்வுகாண முடியும்; போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் போராட்டம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருந்தாலும், தேவைப்பட்டால் பேச்சுவார்த்தையில் பங்கற்கத் தயார் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக, இந்தப் பிரச்னையில் மாநில அரசு திங்கள்கிழமை தலையிட்டது. மும்பையில் தலைமைச் செயலகம் அமைந்துள்ள மந்த்ராலயத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகளை அழைத்து தலைமைச் செயலர் டி.கே.ஜெயின் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும் பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படவில்லை.
அதைத் தொடர்ந்து, உத்தவ் தாக்கரேவுடன் முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். அவர்கள் விவாதித்த விஷயங்கள் உடனடியாகத் தெரியவில்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.