மராத்தா இடஒதுக்கீடுக்கு எதிரான மனுக்கள்: பிப். 6 முதல் இறுதிகட்ட விசாரணை
கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் மராத்தா சமூகத்தினருக்கு 16 சதவீதம் இடஒதுக்கீடு அளிப்பதாக மகாராஷ்டிர
கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் மராத்தா சமூகத்தினருக்கு 16 சதவீதம் இடஒதுக்கீடு அளிப்பதாக மகாராஷ்டிர அரசு அறிவித்ததற்கு எதிரான மனுக்கள் மீதான இறுதி கட்ட விசாரணை பிப்ரவரி 6-ஆம் தேதி முதல் தொடங்கும் என்று மும்பை உயர்நீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.
மகாராஷ்டிரத்தின் மொத்த மக்கள் தொகையில் மராத்தா சமூகத்தினர் 30 சதவீதம் பேர் உள்ளனர். அரசு வேலைவாய்ப்புகள், கல்வி ஆகியவற்றில் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று அந்த சமூகத்தினர் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்தனர். கடந்த ஆண்டில் போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
அதையடுத்து கல்வி, அரசு வேலைவாய்ப்பு ஆகியவற்றில் மராத்தா சமூகத்தினருக்கு 16 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதா, மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நவம்பர் 30-ஆம் தேதி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பை உயர்நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த மனுக்கள் மீதான முந்தைய விசாரணையின் போது, நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை இடஒதுக்கீட்டை பயன்படுத்தி யாரையும் பணியமர்த்த மாட்டோம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதைத்தொடர்ந்து அந்த மனுக்கள் மீதான அடுத்தகட்ட விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சித் மோரே மற்றும் பாரதி தாங்ரே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை நடைபெற்றது.
அப்போது இந்த மசோதா குறித்து முழு அறிக்கை தாக்கல் செய்யுமாறு மகாராஷ்டிர அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதற்கு மறுப்பு தெரிவித்த அரசு வழக்குரைஞர், அந்த மசோதாவில் மராத்தா சமூகத்தின் வரலாறு குறித்து சில பக்கங்கள் உள்ளன. அதை பொது தளத்தில் வெளியிட்டால், தேவையற்ற இனக் கலவரத்துக்கு வழி வகுக்கும் என்ற அச்சம் அரசுக்கு உள்ளது என்றார்.
அதைக் கேட்ட நீதிபதிகள், முதலில் முழு அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பியுங்கள். அதை மனுதாரர்களிடம் முழுவதுமாக அளிப்பதா இல்லையா என்பதை நாங்கள் வரும் 28-ஆம் தேதி முடிவு செய்கிறோம் என்றனர்.
அதையடுத்து பேசிய வழக்குரைஞர், அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்கள் அதிக அளவில் உள்ளன. அதனால் முந்தைய விசாரணையில் கூறியபடி, நீதிமன்ற விசாரணை முடியும்வரை பணியிடங்களை நிரப்பாமல் இருக்க முடியாத காரணத்தால் தற்போது நியமனங்கள் மேற்கொள்கிறோம். எனினும் அந்த நியமனங்கள் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டதாக இருக்கும் என்றார்.
அதற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்ததையடுத்து, முந்தைய விசாரணையில் கூறிய நிலையே தொடர்வதற்கு அரசு வழக்குரைஞர் ஒப்புக்கொண்டார். அதையடுத்து இந்த மனுக்கள் மீதான இறுதிகட்ட விசாரணை பிப்ரவரி 6-ஆம் தேதி முதல் தொடங்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.