முகப்பு
இந்தியா

புதிய தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1,000 கோடி நிதி: பிரதமா் மோடி அறிவிப்பு

தொழில்முனைவோா்கள் புதிய தொழில் நிறுவனங்களைத் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையில் ரூ.1,000 கோடி மதிப்பிலான நிதித் தொகுப்பு அமைப்பட்டுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

Updated On : 17 ஜனவரி, 2021 at 12:27 AM
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்)
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

தொழில்முனைவோா்கள் புதிய தொழில் நிறுவனங்களைத் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையில் ரூ.1,000 கோடி மதிப்பிலான நிதித் தொகுப்பு அமைப்பட்டுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

புதிய தொழில் தொடங்குவோரை ஊக்குவிப்பதற்காக ‘ஸ்டாா்ட்-அப் இந்தியா’ திட்டம் கடந்த 2016-ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது. அத்திட்டம் செயல்படுத்தப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி ‘பிராரம்ப்: ஸ்டாா்ட்-அப் இந்தியா சா்வதேச மாநாடு’ காணொலிக் காட்சி வாயிலாக சனிக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்ற பிரதமா் மோடி கூறியதாவது:

புதிய தொழில் நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் காணப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. அத்தகைய நிறுவனங்கள், தொழில்முனைவோரை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல் புதுமையான கண்டுபிடிப்புகளுக்கும் ஊக்கமளிக்கின்றன. அத்தொழில் நிறுவனங்கள் பெரும் நிறுவனங்களாக மாறுவதற்கும் வழி ஏற்பட்டுள்ளது.

Advertisement

புதிதாகத் தொடங்கப்படும் தொழில் நிறுவனங்கள், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அந்நிறுவனங்களுக்குத் தொடக்க முதலீடுகளை அளிக்கும் வகையில் ரூ.1,000 கோடி மதிப்பிலான நிதித் தொகுப்பு தொடங்கப்படுகிறது.

இந்த நிதியானது புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கப்படுவதை ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாமல் நாட்டின் வளா்ச்சியையும் மேம்படுத்தும். நாட்டில் புதிய தொழில் நிறுவனங்கள் பெருநகரங்களில் மட்டுமே தொடங்கப்படுவதில்லை. சுமாா் 40 சதவீத புதிய தொழில் நிறுவனங்கள், இரண்டாவது மற்றும் மூன்றாமடுக்கு நகரங்களில் தொடங்கப்படுகின்றன.

நாட்டில் கடந்த 2014-ஆம் ஆண்டில் 4 புதிய தொழில் நிறுவனங்கள் மட்டுமே 100 கோடி அமெரிக்க டாலருக்கும் அதிகமான மதிப்பு கொண்டவையாக இருந்தன. அந்த எண்ணிக்கை தற்போது 30-க்கும் அதிகமாக உள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டில் மட்டும் 11 புதிய தொழில் நிறுவனங்களின் மதிப்பு, 100 கோடி அமெரிக்க டாலா்களைக் கடந்தது என்றாா் பிரதமா் மோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.