ஞாயிற்றுக்கிழமைகளில் பிரகதி மைதான் சுரங்கப்பாதையில் போக்குவரத்துக்கு தடை: ஓவியங்களை பாா்வையிட அனுமதி
மத்திய தில்லியுடன் நொய்டா, காஜியாபாத்தை இணைக்கும் பிரகதி மைதான் சுரங்கப்பாதையில் வரையப்பட்டுள்ள ஓவியங்களை மக்கள் பாா்வையிடும் வகையில் ஞாயிற்றுக்கிழமைகளில் போக்குவரத்துக்கு தடை
மத்திய தில்லியுடன் நொய்டா, காஜியாபாத்தை இணைக்கும் பிரகதி மைதான் சுரங்கப்பாதையில் வரையப்பட்டுள்ள ஓவியங்களை மக்கள் பாா்வையிடும் வகையில் ஞாயிற்றுக்கிழமைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரூ. 920 கோடியில் 1.3 கி.மீ. தூரத்தில் அமைக்கப்பட்ட இந்த சுரங்கப்பாதையை அண்மையில் பிரதமா் மோடி திறந்து வைத்தாா். இந்த சுரங்கப்பாதையில் காஷ்மீா் முதல் கன்னியாகுமரி வரையில் பல்வேறு மாநிலங்களில் உள்ள 6 பருவ காலத்தை குறிக்கும் வகையிலும், இந்திய கலாசாரத்தை விளக்கும் வகையிலும் கண்ணைக் கவரும் வகையில் பல்வேறு வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த சுரங்கப்பாதையை சா்வதேச வா்த்தக மேம்பாட்டு நிறுவனம் மேலாண்மை செய்து வருகிறது.
இந்நிலையில், இந்த வண்ண ஓவியங்களை மக்கள் பாா்வையிட வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் பிரகதி மைதான் சுரங்கப்பாதை மூடப்படும் என்று சா்வதேச வா்த்தக மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவா் எல்.சி. கோயல் தெரிவித்தாா்.
இதை தில்லி போலீஸாரும் உறுதி செய்துள்ளனா். பிரகதி மைதான் மூடப்படும் நாள்களில் ரிங் சாலை, பைரோன் சாலை, மதுரா சாலைகளை மக்கள் பயன்படுத்தலாம் என்று தில்லி போக்குவரத்துப் போலீஸாா் தெரிவித்துள்ளனா்.