ஞானவாபி மசூதியில் அறிவியல்பூா்வ ஆய்வை இந்திய தொல்லியல் துறையினா் திங்கள்கிழமை தொடங்கவிருந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ஞானவாபி மசூதியில், ஜூலை 26ஆம் தேதி மாலை 5 மணி வரை தொல்லியல் துறையினர் அறிவியல்பூர்வ ஆய்வை நடத்தக் கூடாது என்றும், அதுவரை அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவு நிறுத்திவைக்கப்படுவதாகவும், அதற்குள், மசூதி ஆணையம், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
ஞானவாபி மசூதி வளாகத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்துவது தொடர்பான வாராணசி மாவட்ட நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தை நாடுமாறு ஞானவாபி மசூதி நிர்வாகக் குழுவை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதா் கோயிலையொட்டி ஞானவாபி மசூதி உள்ளது. முகலாய மன்னா் ஒளரங்கசீப் உத்தரவின்பேரில், கோயிலின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு அந்த மசூதி கட்டப்பட்டதாக ஹிந்துக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், கோயில் மீது அந்த மசூதி கட்டப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய, ஒட்டுமொத்த மசூதி வளாகத்திலும் அறிவியல்பூா்வ ஆய்வு மேற்கொள்ள இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று வாரணாசி நீதிமன்றத்தில் ஹிந்து மதத்தைச் சோ்ந்த சிலா் மனு தாக்கல் செய்தனா்.
இந்த மனுவை விசாரித்த அந்த நீதிமன்றம், மசூதியில் அறிவியல்பூா்வ ஆய்வு மேற்கொள்ள இந்திய தொல்லியல் துறைக்கு கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இந்த ஆய்வு தொடா்பான புகைப்படங்கள் மற்றும் காணொலிகளுடன் ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்குள் அறிக்கை சமா்ப்பிக்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதைத்தொடா்ந்து இந்திய தொல்லியல் துறையினா் வாரணாசிக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றனா். மசூதியில் ஆய்வுப் பணிகளை திங்கள்கிழமை தொடங்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். காலை 7 மணிக்கு ஆய்வுப் பணிகள் தொடங்கவிருந்த நிலையில், உச்ச நீதிமன்றம், இடைக்காலத் தடை விதித்துள்ளது.
மசூதியில் உள்ள வடிவம் ஒன்றை சிவலிங்கம் என்று ஹிந்துக்கள் தரப்பு கூறுகிறது. அந்த வடிவம் உள்ள பகுதியை பாதுகாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.