முகப்பு
இந்தியா

கேஜரிவால் கைது விவகாரம்: அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

Updated On : 15 ஏப்ரல், 2024 at 4:28 PM
அரவிந்த் கேஜரிவால் - ANI
பகிர்:

தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை தில்லி உயர்நீதிமன்றம் உறுதிசெய்தது. இதையடுத்து, அவரது நீதிமன்றக் காவல் இம்மாதம் 23-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தில்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளதை எதிர்த்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று(ஏப். 15) விசாரணைக்கு வந்தது.

கேஜரிவால் கைது விவகாரம் தொடர்பான மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு அமலாக்கத்துறைக்கு பிறப்பித்துள்ள உத்தரவில், கேஜரிவால் கைது விவகாரம் தொடர்பாக இம்மாதம் 25-ஆம் தேதிக்குள் அமலாக்கத்துறை உரிய விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கேஜரிவால் தாக்கல் செய்துள்ள மனு மீதான அடுத்தகட்ட விசாரணை இம்மாதம் 29-ஆம் தேதிக்கு பின் மீண்டும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பிரசாரத்தில் கேஜரிவால் ஈடுபட முடியாத வகையில் அரசியல் உள்நோக்கத்துடன் அவர் கைது செய்யப்பட்டதாக கேஜரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அபிஷேக் சிங்வி வாதிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.