அமெரிக்காவுக்குச் செல்வோர், பிராண்டட் பொருள்களின் போலிகள் என்று தெரியாமலோ தெரிந்தோ வாங்கி வைத்திருந்தால், அவற்றை கொண்டு செல்லாதீர்கள். சென்றால், அவை சுங்கத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்படும்.
அமெரிக்கா செல்கிறோம் என்று புமா, அடிடாஸ், நைக் போன்ற உயர்தர பிராண்டட் பொருள்களை தேடித் தேடி வாங்குபவர்கள், அதற்குரிய இடங்களில் வாங்குங்கள். ஒருவேளை பேரம் பேசி அடிமாட்டு விலைக்கு வாங்கி சபாஷ் போட்டுக் கொள்ள முயன்றால், அது போலியானதாக இருக்கலாம், அமெரிக்கா செல்லும்போது அவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவிலிருந்து அண்மைக் காலத்தில், அமெரிக்கா சென்ற மாணவர்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோரிடமிருந்து, விமான நிலையத்தில், மிக விலைகொடுத்து வாங்கிய பிராண்டட் என்று நம்பிய போலி பொருள்களை அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையின் கண்காணிப்புப் பிரிவு, பறிமுதல் செய்துள்ளது.
அதிலும், பறிமுதல் செய்யப்படும் பொருள்கள், இந்தியப் பயணிகளின் கண் முன்னே அழிக்கப்படுவதாகவும், துணிகளாக இருந்தால் கிழிக்கப்பட்டு குப்பையில் வீசப்படுவதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு விதிகள் சொல்வது என்னவென்றால், தனிநபர் ஒருவர், சட்டை, கைப்பை, காலணி என அனைத்து பயன்பாட்டுப் பொருள்களிலும் தலா ஒரு பிராண்டட் பெயரில் இருக்கும் போலியான பொருள்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கலாம். அதுவும் தனிநபரின் பயன்பாட்டுக்காக மட்டுமே, விற்பனைக்கு அல்ல, மற்றவை இதனை விட ஒன்று அதிகமாக இருந்தாலும் அவை பறிமுதல் செய்யப்பட வேண்டும். அதுவும், அந்த தனி நபர், இந்த ஒரு போலி பொருள் எனும் வாய்ப்பை 30 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே பெற முடியும்.
ஒரு பதிவு செய்யப்பட்ட பிராண்டட் பொருளின் பெயரில் அல்லது சின்னம் கொண்ட போலி பொருள்கள் அமெரிக்காவுக்குள் நுழைவது தவறு என்கிறது விதிமுறைகள்.
இதுபோல, பிராண்டட் பொருள்களின் பெயரில் இருக்கும் பயன்பாட்டுப் பொருள்களை, அமெரிக்காவில் பயன்படுத்தவோ அல்லது அமெரிக்காவில் இருக்கும் உறவினர்களுக்காகவோ வாங்கிச் செல்லும்போதுதான் இந்தியர்கள் பெரும்பாலும் மிக மோசமாக நடத்தப்படுவதாகவும், இது போலியான பொருள்களை கடத்துவதற்குச் சமம் என்றும், அவர்கள் மீது குற்ற வழக்குப் பதிவு செய்யப்படும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இல்லையென்றால், அவை அனைத்தையும் அவர்களது குப்பைத்தொட்டியில் போடுவதைத்தான் நம்மால் பார்க்க முடியும்.
எனவே, பிராண்டட் பொருள்களை, பயன்படுத்தாமல், கவர் கூட பிரிக்காமல், அமெரிக்காவில் பயன்படுத்த வேண்டும் என்று வாங்கிச் செல்லும்போது அது உண்மையான பிராண்டட் பொருள்தானா என்பதை கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம். அது மட்டுமல்ல ஒன்றுக்கும் மேற்பட்ட ஒரே வகையான பயன்பாட்டுப் பொருள்களை இப்படி கொண்டு செல்லும்போது மிகவும் எச்சரிக்கை.
இவ்வாறு விவரம் தெரியாமல், அமெரிக்கா செல்லும் இந்தியர்கள் பலரும் பல ஆயிரம் முதல் பல லட்சம் மதிப்புள்ள பொருள்களை போலியானவை என்று கண்டறியப்படும்போது பறிகொடுக்க நேரிடுகிறது.
இதுபற்றி பெரும்பாலானோருக்குத் தெரிவதில்லை. இந்தியாவில், பெரிய பிராண்ட் பெயர்களில் போலியான பொருள்கள் விற்பனை மிகவும் அதிகம். ஆனால், அவற்றை நமது உடைமைகளைக்கிக் கொண்டு அமெரிக்கா செல்லும்போது அது மிகப்பெரிய குற்றமாக மாறுகிறது ஏன்பதை முதல் முறையாக வெளிநாடு செல்வோர் அறிந்திருக்க வாய்ப்புக் குறைவுதான்.
எனவே, பிராண்டட் பெயரில் இருக்கும் பொருள்களை வாங்குவோர், அதன் போலிகளை அடையாளம் காண்பது எப்படி என்பதை அறிந்து கொண்டு பிறகு தெளிவாக உறுதியான பொருள்களை வாங்கிக் கொண்டு வெளிநாடு புறப்படுவதே சாலச் சிறந்தது. இல்லை யென்றால், வாங்கிய பிராண்டட் பொருள்களை போலியானது என்று தெரிய வந்தால், இந்தியாவிலேயே விட்டுவிட்டுச் செல்வது நல்ல யோசனையாக இருக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.