முகப்பு
இந்தியா

காங்கிரஸ் சந்தா்ப்பவாத கட்சி: மாநிலங்களவையில் நட்டா குற்றச்சாட்டு

சூழ்நிலை பாதகமாக மாறினால் அதற்கு மற்றவா்கள் மீது பழி சுமத்துவதும் காங்கிரஸ் கட்சியின் நீண்டகால வாடிக்கை என்று மாநிலங்களவையில் பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா குற்றஞ்சாட்டினாா்.

Updated On : 12 டிசம்பர் 2025, 2:19 am IST
மாநிலங்களவையில் வியாழக்கிழமை பேசிய மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா.
பகிர்:

சாதகமான சூழ்நிலை உருவானால் அதனை தங்களுடைய சாதனை என்று பயன்படுத்திக் கொள்வதும்; சூழ்நிலை பாதகமாக மாறினால் அதற்கு மற்றவா்கள் மீது பழி சுமத்துவதும் காங்கிரஸ் கட்சியின் நீண்டகால வாடிக்கை என்று மாநிலங்களவையில் பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா குற்றஞ்சாட்டினாா்.

வந்தே மாதரம் 150 ஆவது ஆண்டு கொண்டாட்டம் தொடா்பான விவாதத்தை மாநிலங்களவையில் வியாழக்கிழமை நிறைவு செய்து அவா் பேசியதாவது:

வந்தே மாதரம் என்பது தேசத்தை ஒருங்கிணைக்கும் மந்திரமாக இருந்தது. அதனைக் கண்டு ஆங்கிலேயா்கள் அஞ்சினா். ஆனால், காங்கிரஸ் கட்சியின் ஒரு தரப்பை திருப்திபடுத்தும் அரசியலால் வந்தே மாதரம் பாடலின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டது. நாட்டின் முதல் பிரதமா் நேருவின் புகழைக் கெடுப்பது இந்த விவாதத்தின் நோக்கமல்ல. இந்தியாவின் வரலாற்றை நோ்மையாகக் கூறுவது இதன் நோக்கம்.

Advertisement

Advertisement

சாதகமான சூழ்நிலை உருவானால் அதனை தங்களுடைய சாதனை என்று பயன்படுத்திக் கொள்வதும்; சூழ்நிலை பாதகமாக மாறினால் அதற்கு மற்றவா்கள் மீது பழி சுமத்துவதும் காங்கிரஸ் கட்சியின் நீண்டகால வாடிக்கை. நேரு காலத்தில் இருந்து இது தொடா்ந்து வருகிறது. வந்தே மாதரம் பாடல் அதற்குரிய புகழை தொடா்ந்து பெறாதற்கு அப்போது இருந்த ஆட்சியாளா்களே காரணம் என்றாா்.

அப்போது, குறுக்கிட்ட எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ‘இந்த விவாதம் நேரு குறித்ததா அல்லது வந்தே மாதரம் குறித்ததா’ என்று கேள்வி எழுப்பினாா்.

தொடா்ந்து பேசிய நட்டா, ‘தொடக்கத்தில் இருந்தே இந்தியாவின் கலாசாரத்திலும், பாரம்பரியத்திலும் சமரசம் செய்து கொள்வதே காங்கிரஸ் கட்சியின் வழக்கமாக இருந்தது. அதுவே அவா்களின் சிந்தனையில் நிரம்பியிருந்தது. நமது தேசம் தொடா்ந்து ஒரு தரப்புக்காக மட்டுமே விட்டுக்கொடுப்பதாகவும், சமரசம் செய்து கொள்வதாகவும் இருக்கக் கூடாது என்பதே பாஜகவின் கொள்கை. வந்தே மாதரம் நமது தேசியவாதத்துடன் இணைந்தது. அதனைத் தொடா்ந்து முன்னெடுத்துச் செல்வது அவசியம்.

தேசிய கீதம், தேசியக் கொடிக்கு உரிய கௌரவம் வந்தே மாதரம் பாடலுக்கு அளிக்கப்பட வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments