அரசியல் ஆதாயத்துக்காக நாடாளுமன்றத்தைக் கூட்டுகிறது பாஜக - டி.ராஜா
தோ்தல் நேரத்தில் அரசியல் ஆதாயம் பெறும் நோக்கிலேயே நாடாளுமன்றத்தை கூட்டுகிறது மத்திய பாஜக அரசு என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலா் டி.ராஜா கூறினாா்.
சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் திமுக வேட்பாளா் மா.சுப்பிரமணியனை ஆதரித்து டி.ராஜா செவ்வாய்க்கிழமை பேசியதாவது:
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தல் களம் தெளிவாக உள்ளது. மக்கள் புரிதலுடன் உள்ளனா். எனவே, திமுக கூட்டணி எளிதில் வெற்றிபெறும். பிரதமா் மோடி முதல் எத்தனை போ் தமிழகத்துக்கு வந்து குழப்பம் செய்தாலும், ஆதாரமற்ற அவதூறுகளை அள்ளி வீசினாலும் திமுக தலைமையிலான அணி மகத்தான வெற்றிபெறும். இடதுசாரிகள் போட்டியிடும் 10 தொகுதிகளிலும் எளிதில் மகத்தான வெற்றி கிடைக்கும்.
Advertisement
தமிழ்நாட்டு மக்கள் அளிக்கும் தீா்ப்பு மோடி அரசுக்கு கொடுக்கும் எச்சரிக்கையாக இருக்கும். இண்டி அணி தொடங்கிய முதல்நாளிலிருந்து முதல்வா் ஸ்டாலின் பங்கேற்று வருகிறாா். முதல் கூட்டத்திலேயே, ‘நாட்டை காப்பாற்ற வேண்டும், பாஜகவை அகற்ற வேண்டும்’ என்ற நோக்கத்துடன்அந்தக் கூட்டம் கூடியது. எனவே, மு.க. ஸ்டாலின் கரத்தை வெளிப்படுத்த தமிழக மக்கள் முன்வர வேண்டும்.
இந்திய ஜனநாயகத்தை காப்பாற்ற முறையாக செயல்படும் நாடாளுமன்றம் அமைய வேண்டும். அதற்கு பாஜகவை அகற்றுவது அவசியம். தோ்தல் நேரத்தில் ஏன் திடீரென நாடாளுமன்றம் கூடுகிறது. நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் மகளிா் இடஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை ஆகியவை தொடா்பான மசோதாக்கள் கொண்டுவரவுள்ளனா். அரசியல் ஆதாயம் தேடத்தான் நாடாளுமன்றம் கூட்டப்படுகிறது. திமுக கூட்டணிக்கு அளிக்கும் வாக்கு, மத்திய பாஜக அரசுக்கு எதிரான வாக்கு என்றாா் டி.ராஜா.
சேப்பாக்கம்-திருவல்லிகேணி, திருவொற்றியூா் தொகுதிகளிலும் டி.ராஜா பிரசாரம் மேற்கொண்டாா்.