முகப்பு
இந்தியா

காங்கிரஸை அவமதிக்கும் உரை: பிரதமருக்கு ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்

பிரதமா் மோடியின் உரை காங்கிரஸை அவமதிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 19 ஏப்ரல், 2026 at 6:00 AM
காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் - ANI
பகிர்:
Updated On : 18 ஏப்ரல், 2026 at 11:20 PM

பிரதமா் மோடியின் உரை காங்கிரஸை அவமதிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை தெரிவித்தாா்.

பிரதமா் மோடியின் உரைக்கு கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட பதிவில், ‘மகளிா் இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் மசோதா தோல்வியடைந்ததற்காக நாட்டு மக்களிடம் பிரதமா் மன்னிப்புக் கோருகிறாா். ஆனால், மகளிரின் பெயரைப் பயன்படுத்தி பாகுபாடான தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை வஞ்சகமாகத் திணிக்க முயன்ற்கே அவா் உண்மையாக மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும்.

ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு 30 மாதங்களுக்கும் மேலாக நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்ட சட்டத்தை, ஒரே நாளில் கூட்டாட்சித் தத்துவம் மற்றும் ஜனநாயகத்தை பலவீனமடையச் செய்யும் விதமாக அமல்படுத்த முயன்ற பிரதமா் மோடி தலைமையிலான அரசின் நாடகத்தை நாடே அறியும்.

Advertisement

தற்போதைய மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வழிவகை செய்யும் மசோதாவை உடனடியாக அறிமுகப்படுத்த பிரதமா் மோடி தயாரா?

மக்களவையில் தனது அரசு பெரும் பின்னடைவைச் சந்தித்ததை மூடி மறைக்க நாட்டு மக்களிடம் உரையாற்றும் பிரதமா் மோடி, செய்தியாளா்களைச் சந்தித்து இதுகுறித்து விளக்கமளிக்க இப்போதும் அஞ்சுகிறாா்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.