இந்தியாவில் சமையல் எரிவாயு பயன்பாடு 13% வீழ்ச்சி!
இந்தியாவில் சமையல் எரிவாயு பயன்பாடு சென்ற ஆண்டைவிட இந்தாண்டு மார்ச் மாதம் 13% குறைந்துள்ளது.
இந்தியாவில் சமையல் எரிவாயு பயன்பாடு சென்ற ஆண்டைவிட இந்தாண்டு மார்ச் மாதம் 13% குறைந்துள்ளது.
மேற்காசிய போர் காரணமாக எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் சமையல் எரிவாயு பயன்பாடு சென்ற ஆண்டைவிட இந்தாண்டு மார்ச் மாதம் 13% குறைந்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் மார்ச் மாதத்திற்கான எரிவாயு பயன்பாடு 2.379 மில்லியன் டன்களாக கணக்கிடப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டு மார்ச் மாதத்தில் 2.729 மில்லியன் டன்களாக இருந்தது.
Advertisement
சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திடமிருந்து இந்தியா அதிகளவு எரிவாயு இறக்குமதியை நம்பியுள்ள நிலையில் போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால் எரிவாயு பயன்பாடு குறைந்துள்ளது.
மத்திய அரசு எரிவாயு பற்றாக்குறையை சமாளிக்கும் விதமாக வீடுகளுக்கான எரிவாயு உபயோகத்திற்கு முன்னுரிமை கொடுத்து வணிகப் பயன்பாட்டிற்கான விநியோகத்தைக் குறைத்தது.
தரவுகளின்படி, வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு விற்பனை 8.1% குறைந்து 2.219 மில்லியன் டன்களாக உள்ளது.
எரிவாயு பற்றாக்குறையின் தாக்கம் வீட்டு உபயோகம் அல்லாத பிரிவுகளில் மிகக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா தனது எரிவாயு தேவையில் சுமார் 60% இறக்குமதி மூலம் பெறுகின்றது. இதனால், எரிவாயு பற்றாக்குறை காரணமாக உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், பெட்ரோலிய வேதிப்பொருள்கள் உற்பத்தியில் எரிவாயு உற்பத்தியை அதிகப்படுத்துமாறும் அரசு அறிவுறுத்தியிருந்தது.
இதன் காரணமாக, கடந்தாண்டு மார்ச் மாதத்தில் 1.1 மில்லியன் டன்களாக இருந்த எரிவாயு உற்பத்தி, இந்தாண்டு மார்ச் மாதம் 1.4 மில்லியன் டன்களாக உயர்ந்துள்ளது.
மார்ச் மாதத்தில் சரிவு ஏற்பட்ட நிலையிலும், 2025-26 நிதியாண்டிற்கான ஒட்டுமொத்த எரிவாயு பயன்பாடு 6% அதிகரித்து 33.212 மில்லியன் டன்களாக உயர்ந்துள்ளது.