எந்த பயங்கரவாதத்திற்கும் நாடு அடிபணியாது: ஹரியாணா முதல்வர்!
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குல் பற்றி ஹரியாணா முதல்வர் கூறுவது..
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஹரியாணா முதல்வர் நாயப் சிங் சைனி அஞ்சலி செலுத்தினார். புதிய இந்தியா எந்த பயங்கரவாதத்திற்கும் அடிபணியாது, பயங்கரவாதிகளின் சதித் திட்டங்கள் ஒருபோதும் வெற்றிபெற அனுமதிக்காது என அவர் கூறினார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பலியானோரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி,ஹரியாணா முதல்வர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக ஹரியாணா முதல்வரின் எக்ஸ் பதிவில்,
Advertisement
பஹல்காமில் நடைபெற்ற இந்தத் துயரச் சம்பவத்தை இந்தியர்கள் ஒவ்வொருவரும் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
துயரத்திலும், உறுதியிலும் சரி குடிமக்களாகிய நாம் ஒன்றுபட்டு நிற்கிறோம். இந்த புதிய இந்தியா எந்த பயங்கரவாதத்திற்கும் முன் அடிபணியாது. பயங்கரவாதிகளின் சதித் திட்டங்கள் ஒருபோதும் வெற்றிபெற அனுமதிக்கப்படாது.
முன்னதாக, கடந்தாண்டு ஏப். 22 ஆம் தேதி ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத்தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
கர்னால் மாவட்டத்தைச் சேர்ந்த கடற்படை அதிகாரியான லெப்டினன்ட் வினய் நார்வால், இச்சம்பவத்தில் உயிரிழந்த 26 பேரில் ஒருவராவார். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பதிலடி ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது.
இந்த நடவடிக்கையின்போது, இந்திய ஆயுதப் படைகள் பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் இருந்த ராணுவ மற்றும் பயங்கரவாதக் கட்டமைப்புகளை அழித்தன.