முகப்பு
இந்தியா

உங்கள் முன் ஆஜராக முடியாது! நீதிபதிக்கே கடிதம் எழுதிய கேஜரிவால்!

நீதிபதி எஸ்.கே. சர்மாவுக்கு அரவிந்த் கேஜரிவால் எழுதிய கடிதம் பற்றி...

Updated On : 27 ஏப்ரல், 2026 at 11:00 AM
அரவிந்த் கேஜரிவால் - ANI
பகிர்:

தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி ஸ்வரணா காந்தா சா்மாவுக்கு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

அதில், அவர் முன்னிலையில் நடைபெறும் விசாரணைக்கு தான் நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராகப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 27 அன்று, தில்லி மதுபானக் கொள்கை வழக்கில் கேஜரிவால், சிசோடியா மற்றும் பிறரை விசாரணை நீதிமன்றம் விடுவித்தது. சிபிஐயின் வழக்கு நீதித்துறை ஆய்வில் தாக்குப்பிடிக்க இயலாமல், முழுமையாகவே நம்பகத்தன்மையை இழந்துவிட்டது என்று அது கூறியது.

Advertisement

இந்த தீர்ப்புக்கு எதிராக சிபிஐ தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஸ்வரணா காந்தா சா்மாவுக்கு எதிராக கேஜரிவால் பல ஆட்சேபனைகளை எழுப்பியிருந்தாா். அவற்றுள், தனது கைதுக்கு எதிராக அவா் தாக்கல் செய்த மனு மீது நீதிபதி முன்னதாக நிவாரணம் மறுத்ததும், மணீஷ் சிசோடியா மற்றும் கே. கவிதா உள்ளிட்ட மற்ற குற்றம்சாட்டப்பட்டவா்களின் பிணை மனுக்கள் மீது நிவாரணம் வழங்க மறுத்ததும் அடங்கும்.

கேஜரிவாலைத் தவிர, ஆம் ஆத்மி கட்சி தலைவா்களான சிசோடியா மற்றும் துா்கேஷ் பதக் ஆகியோரும் நீதிபதியை இந்த வழக்கிலிருந்து விலக்கக் கோரி மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனா்.

இந்த மனுக்களை நீதிபதி ஸ்வரணா காந்தா சா்மா நிராகரித்து, அவா்களின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டாா். மேலும், வழக்கின் விசாரணையில் இருந்து நீதிபதி ஸ்வரணாவை விலகக் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் நிராகரிக்கப்பட்டது.

இந்த நிலையில், திங்கள்கிழமை நீதிபதி ஸ்வரணாவுக்கு அரவிந்த் கேஜரிவால் எழுதிய கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:

“நீதிபதி ஸ்வரணா காந்தா சா்மாவிடம் இருந்து நீதி கிடைக்கும் என்ற எனது நம்பிக்கை தகர்ந்துவிட்டது. எனவே, மகாத்மா காந்தியின் சத்தியாகிரக வழியைப் பின்பற்ற நான் முடிவு செய்துள்ளேன். எனது மனசாட்சியின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளேன். நீதிபதி ஸ்வரணா காந்தா சா்மாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முறையிடும் உரிமையை நான் கொண்டுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.