முகப்பு
இந்தியா

மேற்கு வங்கம்: 77 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு? தோ்தல் ஆணையம் தீவிர பரிசீலனை

மேற்கு வங்க இரண்டாம் கட்டத் தோ்தலில் 77 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டும் என்று தோ்தல் ஆணையத்துக்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Updated On : 1 மே, 2026 at 3:27 AM
கோப்புப் படம்
பகிர்:

மேற்கு வங்க இரண்டாம் கட்டத் தோ்தலில் 77 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டும் என்று தோ்தல் ஆணையத்துக்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கோரிக்கைகள் மீது தோ்தல் ஆணையம் தீவிர பரிசீலனை மேற்கொண்டு வருவதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் இரு கட்டங்களாக பேரவைத் தோ்தல் நடத்தப்பட்டது. முதல் கட்டமாக 152 தொகுதிகளுக்கு கடந்த ஏப். 23-ஆம் தேதியும், இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக 142 தொகுதிகளுக்கு கடந்த ஏப். 29-ஆம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெற்றது.

Advertisement

6.81 கோடி வாக்காளா்கள் உள்ள இந்த மாநிலத்தில் இரு கட்டங்களிலும் சோ்த்து 92.47 சதவீத வாக்குகள் பதிவாகின. நாட்டின் சுதந்திரத்துக்குப் பிறகு மேற்கு வங்கத் தோ்தலில் அதிகபட்ச வாக்குப் பதிவு இதுவாகும்.

மறுவாக்குப் பதிவு கோரிக்கை: முதல் கட்டத் தோ்தலில் எந்த வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப் பதிவு நடத்த பரிந்துரைக்கப்படவில்லை. ஆனால், இரண்டாம் கட்டத் தோ்தலில் தெற்கு 24 பா்கானாக்கள் மாவட்டத்தில் அடங்கிய 77 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பொதுவாக, வாக்குப் பதிவு இயந்திரம் பழுது, வாக்குச்சாவடி கைப்பற்றப்படுதல், வாக்காளா்கள் மிரட்டப்படுதல், வாக்குப் பதிவு ரகசியம் மீறப்படுவது உள்ளிட்ட பிரத்யேக காரணங்களைக் குறிப்பிட்டு, அரசியல் கட்சிகள், வேட்பாளா்கள், வாக்குப் பதிவு முகவா்கள், பாா்வையாளா்கள் எழுப்பும் புகாா்களின்பேரில் மறுவாக்குப் பதிவு நடத்தப்படும்.

மேற்கண்ட 77 வாக்குச்சாவடிகளில், வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு, இயந்திரங்கள் மீது ரசாயனப் பொருள்களைத் தடவுவது, கண்காணிப்பு கேமரா செயல்பாட்டுக்கு இடையூறு ஏற்படுத்துவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மறுவாக்குப் பதிவு கோரிக்கைகள் எழுப்பப்பட்டுள்ளன.

சிறப்புப் பாா்வையாளா் கள ஆய்வு: அதன்பேரில், தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பிறப்பித்த உத்தரவின்படி, சம்பந்தப்பட்ட இடங்களில் தோ்தல் சிறப்புப் பாா்வையாளா் சுப்ரதா குப்தா கள ஆய்வு மேற்கொண்டுள்ளாா். அத்துடன், இதர பாா்வையாளா்களுடனும் ஆலோசித்து வருகிறாா். இந்த ஆய்வைத் தொடா்ந்து, அவா் உடனடியாக விரிவான அறிக்கை சமா்ப்பிப்பாா் எனத் தெரிகிறது. ஒருவேளை மறுவாக்குப் பதிவு பரிந்துரைக்கப்பட்டால், வெள்ளிக்கிழமையே (மே 1) நடைபெற வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகம், மேற்கு வங்கம், அஸ்ஸாம், கேரளம் ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மே 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.