கேஜரிவால், சிசோடியா விடுவிப்பை எதிர்த்து உடனடியாக மேல்முறையீடு: சிபிஐ முடிவு
தில்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கேஜரிவால், சிசோடியா விடுவிப்புக்கு எதிராக சிபிஐ மேல்முறையீடு செய்ய முடிவு
தில்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் அரவிந்த் கேஜரிவால் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக சிபிஐ மேல்முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மதுபானக் கொள்கையில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், மணீஷ் சிசோடியா விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சிபிஐ, விடுவிப்புக்கு எதிராக உடனடியாக மேல்முறையீடு செய்யவும் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தில்லியில் கடந்த ஆம் ஆத்மி ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட தில்லி மதுபானக் கொள்கையில் ஊழல் செய்ததாக வழக்குப் பதிவு செய்த சிபிஐ, முதல்வராக இருந்த அரவிந்த் கேஜரிவாலையும், துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவையும் கைது செய்தது.
இதுதொடர்பான வழக்கு தில்லி நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில், அரவிந்த் கேஜரிவாலும், மணீஷ் சிசோடியாவும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையையும் கடந்த ஜனவரி மாதம் நீதிமன்றம் நிராகரித்திருந்தது.
இந்த நிலையில்தான், அரவிந்த் கேஜரிவால், மணீஷ் சிசோடியா உள்பட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 23 பேரையும் விடுவிப்பதாக வெள்ளிக்கிழமை (பிப். 27) காலை தில்லி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
சிபிஐ வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டப் பின் முன்னாள் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கதறி அழுதார்.
இதனிடையே, கேஜரிவால் மற்றும் சிசோடியாவின் விடுவிப்பைக் குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின், "மத்திய பாஜக அரசின் குறுகிய அரசியலுக்காக புலனாய்வு அமைப்புகளின் நாணயத்தை அடமானம் வைக்கக் கூடாது.
எனது நண்பர்கள், இவை அனைத்திலும் உறுதியாக நின்று உண்மையை வெளிக்கொண்டு வந்த கேஜரிவால் மற்றும் சிசோடியாவுக்கு நல்வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.