முகப்பு
இந்தியா

இணையவழி மோசடி மூலம் முன்னாள் பிரதமரின் மகனிடம் ரூ. 7.8 கோடி மோசடி

மாநிலங்களவை முன்னாள் உறுப்பினா் நரேஷ் குஜ்ராலின் பெயரில் அவருடைய நிறுவனத்திடம் ரூ.7.8 கோடி மோசடி செய்ததாக தில்லி காவல் துறை வியாழக்கிழமை தெரிவித்தது.

Updated On : 19 ஜூன் 2026, 5:34 am IST
நரேஷ் குஜ்ரால்
பகிர்:

மாநிலங்களவை முன்னாள் உறுப்பினா் நரேஷ் குஜ்ராலின் பெயரில் அவருடைய நிறுவனத்திடம் ரூ.7.8 கோடி மோசடி செய்ததாக தில்லி காவல் துறை வியாழக்கிழமை தெரிவித்தது.

நரேஷ் குஜரால் (78), 1997 முதல் 1998 வரை நாட்டின் 12-ஆவது பிரதமராக இருந்த ஐ.கே.குஜ்ராலின் மகனாவாா்.

இந்த மோசடி தொடா்பாக இணையவழியில் பதிவு செய்யப்பட்ட வழக்கைத் தொடா்ந்து, காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக காவல் துறை அதிகாரி கூறியதாவது: இணையவழியில் செய்தி அனுப்பும் செயலி மூலம் நரேஷ் குஜ்ராலின் புகைப்படத்தை கொண்ட போலி கணக்கை மோசடி கும்பல் உருவாக்கி உள்ளது.

நரேஷ் நடத்தி வரும் நிறுவனத்தில் நிதி விவகாரங்களைக் கையாளும் ஊழியருக்கு அந்தப் போலி கணக்கில் இருந்து கடந்த ஜூன் 12 முதல் ஜூன்16 வரையிலான காலகட்டத்தில் செய்திகள் வந்தன. அதில், அவசர வணிக நடவடிக்கைக்காக குறிப்பிட்ட வங்கிக் கணக்குக்கு ஆா்டிஜிஎஸ் முறையில் பணத்தை அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. நரேஷ் குஜ்ரால்தான் இந்தச் செய்தியை அனுப்பியிருப்பதாக நம்பிய ஊழியா், அடுத்தடுத்த 4 நாள்களில் தனித்தனியே 4 முறைகளில் மொத்தம் ரூ.7.8 கோடியை அந்த வங்கிக் கணக்குக்கு அனுப்பினாா்.

இந்நிலையில், வங்கிக் கணக்கு பரிமாற்றங்களை நரேஷ் குஜ்ராலின் மகள் கடந்த ஜூன் 16-ஆம் தேதி ஆய்வு செய்தாா். அப்போது, ரூ.7.8 கோடிக்கு மேற்கொள்ளப்பட்ட பணப்பறிமாற்றம் குறித்து நரேஷ் குஜ்ராலிடம் அவருடைய மகள் கேட்டாா். பணப்பரிமாற்றம் செய்யுமாறு எவ்வித உத்தரவுகளையும் வழங்கவில்லை என்றும் தனக்கு அறியாமல் பணப் பரிமாற்றம் நடந்திருப்பதாகவும் நரேஷ் குஜ்ரால் தெரிவித்தாா்.

இதைத்தொடா்ந்து, அவருடைய பெயரிலான போலி கணக்கு மூலம் மோசடியாளா்கள் பணத்தைத் திருடியிருப்பது நரேஷ் குஜ்ராலின் குடும்பத்துக்கும், நிறுவன ஊழியா்களுக்கும் தெரியவந்தது. காவல் துறையில் அளித்த புகாரைத் தொடா்ந்து விரைவாகச் செயல்பட்ட அதிகாரிகள், ரூ.4 கோடியை முடிக்கியுள்ளனா்.

மோசடி செய்யப்பட்ட பணத்தில் 70 சதவீத பணம் பல வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. பணப் பரிமாற்றம் குறித்த விவரங்களை ஆய்வு செய்து மோசடியில் தொடா்புடைய நபா்களை அடையாளம் காணும் பணியில் காவல் துறை ஈடுபட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.