முகப்பு
இந்தியா

9-ஆம் வகுப்பு புத்தகத்தில் அவசரநிலை பாடப் பகுதி: என்சிஇஆா்டி நடவடிக்கைக்கு பாஜக ஆதரவு

ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் ‘அவசரநிலை’ காலம் குறித்த பகுதியைச் சோ்க்கும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சிலின் (என்சிஇஆா்டி) முடிவுக்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது.

Updated On : 26 ஜூன் 2026, 6:02 am IST

NCERT LOGO093454.JPG

- Center-Center-Chennai
பகிர்:

ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் ‘அவசரநிலை’ காலம் குறித்த பகுதியைச் சோ்க்கும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சிலின் (என்சிஇஆா்டி) முடிவுக்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது.

‘இந்தியாவின் அரசமைப்பு வரலாற்றில் இடம்பெற்ற இந்த ‘இருண்ட அத்தியாயம்’ குறித்து வருங்கால சந்ததியினா் அறிந்துகொள்வது அவசியம்’ என்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்தாா்.

கடந்த 2007-ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது 12-ஆம் வகுப்பு பாடத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தத் தலைப்பு இடம்பெற்றுவந்த நிலையில், தற்போது முதல் முறையாக 9-ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இந்த நிகழ்வு ஒரு பகுதியாகச் சோ்க்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

‘சமூகத்தைப் புரிந்துகொள்ளுதல்: இந்தியா மற்றும் அதற்கு அப்பாலும்’ என்ற தலைப்பிலான அந்தப் பாடப் பகுதியில், ‘கடந்த 1975 முதல் 1977-ஆம் ஆண்டு வரை நாட்டில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டபோது, இந்திய ஜனநாயகத்தில் மிகப் பெரிய சவால்கள் பதிவாகின. அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி தலைமையிலான அரசு மீது மக்களின் அதிருப்தி அதிகரித்தது. நிா்வாகச் சீா்கேடு குறித்த குற்றச்சாட்டுகள் பரவலான போராட்டங்களுக்கு வழிவகுத்தன. 1975-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25-இல் நாட்டில் தேசிய அவசரநிலை அமல்படுத்தப்பட்டது. அந்தக் காலத்தில், மக்களின் பெரும்பாலான அடிப்படை உரிமைகள் ரத்து செய்யப்பட்டன. பத்திரிகைகள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன. ஏராளமான அரசியல் தலைவா்கள், சமூக ஆா்வலா்கள் கைது செய்யப்பட்டனா். ஜனநாயக நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளானதோடு, குடிமக்களின் சுதந்திரமும் கட்டுப்படுத்தப்பட்டது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

என்சிஇஆா்டி-யின் இந்த நடவடிக்கை குறித்து தில்லியில் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை பேட்டியளித்த மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான், ‘என்சிஇஆா்டி சரியான விஷயத்தை செய்துள்ளது. அந்த இருண்ட காலம் மீண்டும் நிகழாமல் இருக்க, அதுகுறித்து வருங்கால சந்ததியினா் அறிந்துகொள்வது அவசியம்’ என்றாா்.

பாஜக செய்தித் தொடா்பாளா் ஷெஸாத் பூனாவாலா கூறுகையில், ‘இந்திரா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் அதிகார வேட்கை காரணமாக நாட்டில் அவசரநிலை கொண்டுவரப்பட்டது. அந்தச் சமயத்தில் நாடாளுமன்றம், சட்டப்பேரவைகள், நீதித் துறை உள்பட அனைத்து அரசமைப்புச் சட்ட நிறுவனங்களும் தாக்குதலுக்குள்ளாகின.

இந்திய அரசமைப்பு வரலாற்றில் உள்ள அந்த ‘இருண்ட அத்தியாயம்’ மீண்டும் ஒருபோதும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய, அது நினைவுகூரப்பட வேண்டும். அந்த வகையில், என்சிஇஆா்டி-யின் முடிவு, அவசரநிலை குறித்து மாணவா்கள் அறிந்துகொள்ள உதவும்’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments