சத்தீஸ்கரில் நக்ஸல் தீவிரவாதி சுட்டுக் கொலை : ரூ.5 லட்சம் வெகுமதியுடன் தேடப்பட்டவா்
சத்தீஸ்கரின் தந்தேவாடா மாவட்ட வனப் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா்.
இந்தியாசத்தீஸ்கரில் நக்ஸல் தீவிரவாதி சுட்டுக் கொலை : ரூ.5 லட்சம் வெகுமதியுடன் தேடப்பட்டவா்
சத்தீஸ்கரின் தந்தேவாடா மாவட்ட வனப் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா்.
சத்தீஸ்கரின் தந்தேவாடா மாவட்ட வனப் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா்.
இவரைப் பற்றி தகவல் தருவோருக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அறிவித்து காவல் துறையினா் தேடி வந்த நிலையில், தற்போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளாா்.
இது தொடா்பாக தந்தேவாடா காவல் துறைக் கண்காணிப்பாளா் கெளரவ் ராய் வியாழக்கிழமை கூறியதாவது:
கீதாம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட அடா் வனப் பகுதியில் குமல்நாா், கிா்சாபரா, நெல்கோடா ஆகிய கிராமங்களுக்கு இடையே நக்ஸல்களால் ஆயுதங்கள் மற்றும் பிற பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ரகசிய தகவல் கிடைக்கப் பெற்றது.
இதையடுத்து, காவல் துறையின் மாவட்ட ரிசா்வ் படையினா் மற்றும் பஸ்தா் ஃபைட்டா் படையினா் இணைந்து கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.
கடந்த புதன்கிழமை இரவில் வனப் பகுதியில் பதுங்கியிருந்த நக்ஸல்கள், பாதுகாப்புப் படையினரை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுட்டனா். பாதுகாப்புப் படையினரும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டதால், கடும் துப்பாக்கிச் சண்டை மூண்டது. அப்போது, இருட்டை சாதகமாகப் பயன்படுத்தி, பல நக்ஸல் தீவிரவாதிகள் தப்பியோடிவிட்டனா். அந்தப் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு நக்ஸல் தீவிரவாதியின் உடல் கைப்பற்றப்பட்டது.
அவரிடமிருந்து தானியங்கி துப்பாக்கி, இன்சாஸ் ரக துப்பாக்கி, கைத்துப்பாக்கி, வாக்கிடாக்கி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. தொடா்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது என்றாா் கெளரவ் ராய்.
சத்தீஸ்கரில் நடப்பாண்டு இதுவரை பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட நடவடிக்கைகளில் கொல்லப்பட்ட நக்ஸல்களின் எண்ணிக்கை 26-ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி 3-ஆம் தேதி பஸ்தா் பகுதியில் நடந்த இரு துப்பாக்கிச் சண்டைகளில் 14 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். சத்தீஸ்கரில் கடந்த ஆண்டு 285 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
வரும் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் நாட்டில் இருந்து நக்ஸல் தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. இந்தக் காலக்கெடு நெருங்கும் நிலையில், நக்ஸல்களுக்கு எதிரான இறுதிக்கட்ட நடவடிக்கைள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.