ஐ.நா சபை செய்வதறியாது தவிக்கிறது: கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் டி. ராஜா
ஐ.நா சபை செய்வதறியாது தவிக்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் தெரிவித்தது குறித்து...
ஐ.நா சபை செய்வதறியாது தவிக்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் டி. ராஜா தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்.28 முதல் ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையே போர் நடைபெற்று வருகின்றது. போரின் ஒரு வியூகமாக உலகளவில் முக்கிய எண்ணெய் வழிப்போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியுள்ளது.
இந்த நிலையில், இந்தியா உள்பட பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இந்தியாவில் கடும் தட்டுப்பாடு நிலவியதால் மத்திய அரசு, ஈரானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இதன் காரணமாக, ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்தியா வரவேண்டிய எண்ணெய்க் கப்பல்கள் ஒவ்வொன்றாக வந்து கொண்டிருக்கின்றன.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் டி. ராஜா கூறுகையில்,
“தொடர்ந்து நடைபெற்று வரும் இந்தப் போர், உலக வரலாற்றில் ஒரு தீவிரமான செயலாகும். இந்த நெருக்கடியை மேலும் மோசமாக்கியதற்கு அமெரிக்காவும் இஸ்ரேலும்தான் பொறுப்பு. இது பொருளாதாரப் பேரழிவு, எண்ணெய் மற்றும் எரிவாயு விலையேற்றம், உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு இன்னல்கள் ஆகியவற்றுக்கு வழிவகை செய்துள்ளது. சர்வதேச சட்டத்தை நிலைநிறுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை, செய்வதறியாது தவிக்கிறது” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, ஈரான் மீதான இஸ்ரேல், அமெரிக்க தாக்குதல் தொடர்ந்தால் வளைகுடா நாடுகளில் உள்ள எரிசக்தி மையங்கள் முழுவதுமாக அழிக்கப்படும் என ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.