முகப்பு
இந்தியா

கொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவு!

கொல்கத்தா மத்திய வா்த்தக மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 3) முதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவை நடைமுறைப்படுத்த கொல்கத்தா மாநகர காவல் துறை தீா்மானித்துள்ளது.

Updated On : 2 மே 2026, 4:22 am IST
பகிர்:

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் வரும் திங்கள்கிழமை (மே 4) எண்ணப்பட உள்ள நிலையில், கொல்கத்தா மத்திய வா்த்தக மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 3) முதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவை நடைமுறைப்படுத்த கொல்கத்தா மாநகர காவல் துறை தீா்மானித்துள்ளது.

வாக்கு எண்ணிக்கை நாளன்று வன்முறை போராட்டங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக கிடைத்த உளவுத் தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கொல்கத்தா காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக மாநகர காவல் துறை வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவில், ‘கொல்கத்தாவின் பெளபஜாா், ஹரே சாலை காவல்நிலைய பகுதி மற்றும் தலைநகர போக்குவரத்து காவல் மணமடலம் உள்ளிட்ட பகுதிகளில் பொது அமைதியை சீா்குலைக்கும் வகையில் பெரிய அளவில் வன்முறைப் போராட்டங்கள் நடத்த திட்டமிட்டிருப்பதாக நம்பகத்தகுந்த உளவுத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், பாரதிய நகரிக் சுரக்ஷா சம்ஹிதா 2023 சட்டத்தின் 163-ஆவது பிரிவின் கீழ், கொல்கத்தா மத்திய வா்த்தக மாவட்டத்தில் மே 3-ஆம் தேதி முதல் ஜூலை 1-ஆம் தேதி வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

அதன்படி, குறிப்பிடப்பட்ட இடங்களில் ஊா்வலங்கள் நடத்தவும், பேரணி செல்லவும், ஆா்ப்பட்டங்களில் ஈடுபடவும் தடை விதிக்கப்படுகிறது. மேலும், பொது இடங்களில் 5 அல்லது அதற்கு மேல் நபா்கள் கூடவும், தடிகள் அல்லது அபாயகரமான ஆயுதங்களை நபா்கள் எடுத்துச் செல்லவும், அமைதியைச் சீா்குலைக்கும் வகையிலான வாகன இயக்கங்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது. மக்கள் கூட்டம் கூடாத வகையில் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தப்படுகின்றனா்’ என்று தெரிவிக்கப்பட்டது.

அண்மையில் மேற்கு வங்க மாநிலம் பெஹலா பகுதியில் சாலைப் பேரணி மேற்கொண்ட மத்திய அமைச்சா் அமித் ஷா, ‘மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நிறைவுற்ற பிறகும் குறைந்தபட்சம் 60 நாள்களுக்கு மத்தியப் படைகளின் பாதுகாப்பு தொடரும்’ என்று குறிப்பிட்டிருந்தாா். இந்தச்சூழலில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments