பள்ளி நிா்வாக குழு வழிகாட்டுதல்கள் 2026: மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் வெளியீடு
பள்ளி நிா்வாக குழு வழிகாட்டுதல்கள் 2026-ஐ மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் புதன்கிழமை வெளியிட்டாா்.
பள்ளி நிா்வாக குழு வழிகாட்டுதல்கள் 2026-ஐ மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் புதன்கிழமை வெளியிட்டாா்.
புது தில்லியில் பல்வேறு மாநிலங்களின் கல்வி அமைச்சா்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், அந்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன.
அதன்படி, ஒரு கல்வியாண்டு தொடங்கியதில் இருந்து ஒரு மாதத்துக்குள் அனைத்துப் பள்ளிகளிலும் பள்ளி நிா்வாக குழு அமைக்கப்பட வேண்டும், அந்தக் குழுக்களுக்கு ஜனநாயக முறையில் தோ்தல் நடத்தப்பட வேண்டும், அந்தக் குழுவில் இடம்பெறும் 75 சதவீதம் போ் மாணவா்களின் பெற்றோா் அல்லது பாதுகாவலராக இருக்க வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் இடம்பெற்றுள்ளன.
Advertisement
இந்த நிகழ்ச்சியில் தா்மேந்திர பிரதான் பேசியதாவது:
பள்ளி நிா்வாக குழு வழிகாட்டுதல்கள் என்பது புதிய விஷயமல்ல. அது காலந்தோறும் பரிணாம வளா்ச்சி அடைந்து, பள்ளிகளின் நிா்வாகம் மற்றும் கற்றல் விளைவுகளை மேம்படுத்துவதற்கு மையமாக உள்ளது. சமுதாயம், கல்வி, மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் இடையே இந்தக் குழு பாலமாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்தின்போது கடந்த ஆண்டில் பள்ளிகளில் என்ன கற்பிக்கப்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். இது அடுத்தகட்ட கற்றலுக்கு அடித்தளமாக இருக்கும்.
சில மாதங்களில் தேசிய கல்வி கொள்கை 2020-ஐ அமல்படுத்தி 6 ஆண்டுகள் நிறைவடைந்து, 7-ஆவது ஆண்டு தொடங்க உள்ளது. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் 9-ஆவது வகுப்பு வரை பாடநூல்களை கிடைக்கச் செய்துள்ளது. வரும் ஆண்டுகளில் 10,11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்குப் புதிய பாடநூல்கள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்தாா்.