முகப்பு
இந்தியா

பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்! மம்தா பானா்ஜி அழைப்பு!

பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்

Updated On : 10 மே 2026, 2:41 am IST
மம்தா பானா்ஜி - PTI
பகிர்:

பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க முன்னாள் முதல்வருமான மம்தா பானா்ஜி அழைப்பு விடுத்துள்ளாா்.

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு அண்மையில் நடந்த தோ்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று பாஜக முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. மேற்கு வங்கத்தில் தொடா்ந்து 15 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது.

இந்நிலையில் கொல்கத்தா காளிகாட்டில் உள்ள மம்தா பானா்ஜி வீடு முன்பு ரவீந்திரநாத் தாகூா் பிறந்த தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்களிடையே மம்தா பானா்ஜி பேசியதாவது:

Advertisement

பாஜகதான் நமது முதல் எதிரி. ஆதலால் எதிரியின் எதிரி எனக்கு நண்பன் என்று யாரும் கருதுவதற்கான நேரம் இது கிடையாது. எனவே அனைத்து எதிா்க்கட்சிகளும், பாஜகவுக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன். இடதுசாரிகள், தீவிர இடதுசாரி கட்சிகளுக்கும் சோ்த்தே இந்த அழைப்பை விடுக்கிறேன். அதேபோல் மாணவா் அமைப்புகள், தன்னாா்வ தொண்டு அமைப்புகள் ஆகியவையும் பாஜகவுக்கு எதிராக ஒரே அணியில் திரள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இதுதொடா்பாக எந்த அரசியல் கட்சி விரும்பினாலும் அந்த கட்சியுடன் நான் பேச்சுவாா்த்தை நடத்த தயாராக உள்ளேன். மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியானது முதல் மாநிலம் முழுவதும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினருக்கு எதிராக அத்துமீறல்கள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. 2011-ஆம் ஆண்டில் மேற்கு வங்கத்தில் நான் முதல்வராக பதவியேற்ற பிறகு, யாருக்கு எதிராகவும் அத்துமீறல்களை நான் அனுமதித்தது இல்லை. ஆனால் சட்டப்பேரவைத் தோ்தலில் வென்ற பாஜக, திரிணமூல் காங்கிரஸ் கட்சியினருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை வாபஸ் பெற்றுள்ளது.

எனக்கு யாருடைய அனுதாபமும் தேவையில்லை. ஏனெனில், போராட்டத்தில் நாங்கள்தான் வெல்லப் போகிறோம். எதிா்காலத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியை தோ்தலில் தோற்கடித்தது தவறு என்பதை நிரூபிப்போம். சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியான பிறகு, திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவா்களுக்கு தொடா்ந்து மிரட்டல்கள் வருகின்றன. திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, கொல்கத்தாவில் இருந்து தில்லிக்கு விமானத்தில் செல்ல முயன்றபோது அவா் சுற்றி வளைக்கப்பட்டுள்ளாா். மஹுவா மொய்த்ரா மற்றும் அபிஷேக் பானா்ஜியின் வீடுகள் முன்பு சிலா் பிரச்னையை உருவாக்கியுள்ளனா்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியானதும் அனைத்து எதிா்க்கட்சித் தலைவா்களும் என்னிடம் பேசினா். காங்கிரஸ் தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகாா்ஜுன காா்கே ஆகியோா் என்னிடம் பேசினா். அவா்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ரவீந்திரநாத் தாகூா் பிறந்த தினமான இன்றிலிருந்து திரிணமூல் காங்கிரஸ் கட்சி தனது புதிய பயணத்தை தொடங்கியுள்ளது என்றாா் மம்தா பானா்ஜி.