முகப்பு
கண்ணோட்டம்

சுவாமிஜியின் கல்விச் சிந்தனை!

குமரிமுனையில் சுவாமிஜியின் தியானத்தை தொடர்ந்தார். நம் மாணவர்கள் பெறும் கல்வி எதிர்மறையானதாக உள்ளது. மாணவன் புதிதாக ஒன்றையும் கற்பதில்லை.

Updated On : 1 ஜூன், 2013 at 5:57 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:11 PM

குமரிமுனையில் சுவாமிஜியின் தியானத்தை தொடர்ந்தார். நம் மாணவர்கள் பெறும் கல்வி எதிர்மறையானதாக உள்ளது. மாணவன் புதிதாக ஒன்றையும் கற்பதில்லை. அதே வேனையில் தன்னிடம் உள்ளவற்றையும் இழக்கிறான். சிரத்தை இல்லாமல் போய்விட்டது என்பதே இதன் காரணம். சிரத்தை வேத வேதாந்தங்களின் ஆதார சுருதியாகும். சிரத்தைதான் நசிகேதனை எமனுக்கு எதிரே நின்று கேள்வி கேட்கச் செய்தது. சிரத்தையால்தான் உலகம் இயங்குகிறது. இந்தச் சிரத்தை இப்போது நிர்மூலமாக்கப்படுகிறது. "அஜ்ஞச்ச அச்ரத்ததானச்ச ஸம்சயாத்மா வினச்யதி மூடன், சிரத்தை இல்லாதவன், சந்தேகப் பட்டுக் கொண்டே இருப்பவன் ஆகியோர் அழிகின்றனர். எனவே நாம் அழிவிற்கு மிக அருகில் உள்ளோம்.

'இதைத் தவிர்க்க ஒரே வழி கல்வியைப் பரப்புவதே. முதலில் ஆன்ம அறிவு வேண்டும். உடனே ஜடாமுடி, தண்டம், கமண்டலம், மலைக்குகை என்று இதற்குப் பொருள் கொள்ள வேண்டாம். அப்படியானால் நான் கூறும் பொருள் என்ன? உலக பந்தங்களிலிருந்து விடுபட்டு ஒருவனை முக்தனாகக் கூடிய அறிவால் சாதாரண வாழ்க்கையில் முன்னேற்றத்தைத் தர முடியாதா? முடியும், நிச்சயமாக முடியும்...

'இந்தியாவில் தோன்றியுள்ள மதப் பிரிவினர் எல்லோருமே ஜீவாத்மாவில் எல்லையற்ற ஆற்றல் அடங்கியுள்ளது என்பதை ஏற்றுக் கொள்கின்றனர். வெளிப்பாட்டில் தான் வேறுபாடு உள்ளதே தவிர எறும்புமுதல் மனிதன் வரை எல்லோருள்ளும் ஒரே ஆன்மாதான் உள்ளது. "(நீர்பாய்வதற்கான ) தடைகளையே விவசாயி நீக்குகிறான். தக்க இடமும் காலமும் கிடைத்தவுடன் அந்த ஆற்றலும் வாய்ப்பும் வெளிப்படுகின்றன. வெளிப்பட்டாலும் படாவிட்டாலும், மிக உயர்ந்த தேவனிலிருந்து மிகச் சாதாரணமான புல் வரை ஒரே சக்திதான் எல்லாவற்றிலும் நிறைந்திருக்கிறது. மனிதனில் அந்தச் சக்தியை எழுப்புவதற்காக நாம் வீட்டிற்கு வீடு சென்று முயற்சி செய்ய வேண்டும்.

Advertisement

'இரண்டாவதாக, இதனுடன் கல்வியையும் தர வேண்டும். இதைச் சொல்வது எளிது, ஆனால் செயல் முறையில் கொண்டுவருவது எப்படி? நம் நாட்டில் எல்லாவற்றையும் துறந்த, தன்னலமற்ற, கருணை நிரம்பிய மக்கள் ஆயிரக் கணக்கில் உள்ளார்கள். அவர்கள் பல்வேறு இடங்களுக்கு யாத்திரை செல்லுமபோது, எவ்விதப் பிரதி பலனையும் எதிர்பார்க்காமலே மதத்தைப் போதிக்கிறார்கள். அவர்களுள் பாதி பேராவது ஆசிரியர்களாகப் பயிற்சி பெறலாம். எத்தகைய கல்வி நமக்கு மிகவும் தேவையாக உள்ளதோ, அத்தகைய கல்வியை அவர்கள் கொண்டு செல்லலாம்.

ஆனால் எதற்கும் பணம் வேண்டும். எந்தப் பபணியும் எந்தக் காரியமும் நடக்க வேண்டுமானால் பணம் தேவை. அதற்கு என்ன வழி? பணம் எங்கே இருக்கிறதோ அங்கிருந்து பெற வேண்டும். மேலை நாடுகளில் உள்ள பணம் இந்தியாவிற்கு வர வேண்டும். இதற்காக இந்தியா மேலை நாடுகளிடம் கைகட்டி, வாய்புதைத்து, கூனிக்குறுகி நிற்க வேண்டுமா? வேண்டாம். இங்கிருப்பதை அங்கே கொடுப்போம், பதிலுக்கு அங்கிருக்கின்ற பணத்தைப் பெற்றுக் கொள்வோம்.

இங்கே இந்தியாவில் இருப்பது என்ன? ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த முனிவர்கள் நமக்கு விட்டுச் சென்ற ஆன்மீகம், ஆன்மீகம், ஆன்மீகம் மட்டுமே நம்மிடம் உள்ளது. காலத்தால் அழிக்க முடியாத அதனை மேலை நாடுகளுக்குக் கொடுப்போம்.

மேலை நாடுகளுக்கு எப்படிப் போவது?

இதுவரை எந்த இறைவன் தன்னைக் காத்துவந்துள்ளாரோ, அவர் இதற்கும் வழிகாட்டுவார் என்று தெளிந்தார் சுவாமிஜி.

சுவாமிஜியின் தியானம் நிறைவுற்றது.

இதற்குள் மூன்று நாட்கள் கழிந்திருந்தன. இது 1892 டிசம்பர் 24 முதல் 26ஆக இருக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.