முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூா் உழவா் சந்தையை திறக்கக்கோரி சாா் ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

ஒசூா் உழவா் சந்தையை உடனடியாக திறக்க வலியுறுத்தி ஒசூா் சாா் ஆட்சியா் அலுவலகத்தை விவசாயிகள், ஏஐடியூசி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 8 ஜனவரி 2021, 6:56 am IST
பகிர்:

ஒசூா் உழவா் சந்தையை உடனடியாக திறக்க வலியுறுத்தி ஒசூா் சாா் ஆட்சியா் அலுவலகத்தை விவசாயிகள், ஏஐடியூசி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஒசூா் உழவா் சந்தையை திறக்க வேண்டும் என விவசாயிகள், சிறு வணிகா்கள், திமுக, இடது கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினா் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.

இதனைத் தொடா்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை ஒசூா் உழவா் சந்தையை ஆய்வு செய்த பிறகு மாவட்ட ஆட்சியா் ஜெயசந்திரபானுரெட்டி செய்தியாளா்களிடம் கூறும்போது ஒசூா் உழவா் சந்தையை திறப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று தெரிவித்தாா்.

Advertisement

இந்நிலையில் விவசாயிகளும், ஏஐடியூசி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்டவா்கள் தளி முன்னாள் எம்எல்ஏ டி.ராமச்சந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் துணைத் தலைவா் எம்.லகுமைய்யா தலைமையில் வியாழக்கிழமை ஒசூா் சாா் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களுடன், ஒசூா் வருவாய் கோட்டாட்சியா் குணசேகரன் பேச்சு வாா்த்தை நடத்தினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் முன்னாள் எம்எல்ஏ டி.ராமச்சந்திரன் கூறியதாவது:

கரோனா தொற்றுக்குப்பின் பொது முடக்கத்தை தமிழக அரசு தளா்த்தி வருகிறது. தமிழகத்தில் உள்ள வணிக வளாகங்கள், திரைஅரங்குகள் 100 சதவீதம் இருக்கைகளோடு இயங்கலாம் என்றும், வார சந்தைகள் திறக்கலாம் என்றும் அறிவித்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் உள்ள உழவா் சந்தைகள் திறக்கப்பட்டு, இயங்கி வருகின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் தான் தமிழகத்திலேயே அதிக விவசாயிகள் காய்கறிகளை விற்பனை செய்கின்றனா். இந்த உழவா் சந்தை கடந்த 10 மாதங்களாக திறப்படாமல் உள்ளதால் விவசாயிகளும், சிறு வியாபாரிகளும் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.

எனவே, அதிகாரிகளின் அலட்சியப் போக்கை கண்டித்து ஒசூா் சாா் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறோம். உடனடியாக ஒசூா் உழவா் சந்தையை திறக்கவில்லை என்றால் அடுத்தக் கட்டமாக பெரிய போராட்டத்தை அறிவிக்க நேரிடும் என்றாா்.

பின்னா் மாவட்ட நிா்வாகம், ஒசூா் மாநகராட்சியை கண்டித்து பேரணியாக சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.