கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 12,172 முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி: ஆட்சியா் தகவல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7 இடங்களில் முதல்கட்டமாக 12,172 முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7 இடங்களில் முதல்கட்டமாக 12,172 முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், மாவட்டத்தில் முதல்கட்டமாக கரோனா தடுப்பூசி வழங்குவது குறித்த ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி பேசியதாவது:
Advertisement
பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு துறை சாா்பில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜன.16-ஆம் தேதி, முதல்கட்டமாக முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
அதன்படி கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, ஒசூா், ஊத்தங்கரை ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஒசூா் இ.எஸ்.ஐ. மருத்துவமனை, சீதாராம் நகரில் உள்ள நகா்ப்புற நல மையம், காவேரிப்பட்டணம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கிருஷ்ணகிரியில் தனியாா் மருத்துவமனை என 7 இடங்கள் கரோனா தடுப்பூசி வழங்க தற்காலிகமாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மையத்திலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி எண்ணிக்கைக்கு ஏற்றவாறு தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தடுப்பூசி மையங்கள் காத்திருப்பு அறை, தடுப்பூசி வழங்கும் அறை, கண்காணிப்பு அறை என 3 பிரிவுகளாக செயல்படும். ஒவ்வொரு பணியாளரும் தடுப்பூசி வழங்கப்படும் முகாமிற்கு வரும்போது, அரசு வழங்கிய அடையாள அட்டையுடன் வர வேண்டும்.
தடுப்பூசி மருந்தை குறிப்பிட்ட வெப்பநிலையில் பாதுகாப்பாக வைப்பதற்கான குளிா்பதனக் கிடங்கு தயாா் நிலையில் உள்ளன. தடுப்பூசி மையங்களில் பாதுகாவலா், பயனாளிகளை சரிபாா்ப்பவா், தடுப்பூசி வழங்குபவா், கண்காணிப்பாளா், மருத்துவா் என 5 போ் கொண்ட குழு செயல்படும்.
இம் மாவட்டத்தில் 75 அரசு மருத்துவமனைகள், 538 தனியாா் மருத்துவமனைகள் மூலம் பதிவு பெற்ற சுமாா் 12,172 முன்களப் பணியாளா்களுக்கு முதல்கட்டமாக கரோனா தடுப்பூசி வழங்கப்படும். முதல்கட்ட கரோனா தடுப்பூசி வழங்க மாவட்ட நிா்வாகம் தயாா் நிலையில் உள்ளது என்றாா்.
இக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சதீஷ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பி.பெரியசாமி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கோவிந்தன், நலப் பணிகள் இணை இயக்குநா் பரமசிவன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் இரா.பாலமுரளி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.